"கருத்துக் கணிப்புகள்".. ரெக்கை கட்டிப் பறக்கும் கருத்துத் திணிப்புகள்.. "மீடியா மீடியா ஓடியா ஓடியா"

Su.tha Arivalagan
Apr 17, 2024,06:44 PM IST
சென்னை: முன்பெல்லாம் கருத்துக் கணிப்புகள் வரும்போதெல்லாம் ரொம்ப ஆர்வமாக படிக்கத் தூண்டும்.. நிஜமா, ஆச்சரியமா இருக்கே,, நம்ப முடியலையே என்று உணர்வுகளையும், சிந்தனைகளையும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில் கருத்துக் கணிப்புகள் இருந்தன. ஆனால் இன்று ஊடகங்களில் நடக்கும் அட்டகாசத்தையும், கலாட்டாக்களையும் பார்க்கும்போது ஒரு படத்தில் விவேக் சொல்வாரே.. "ஏ மீடியா மீடியா ஓடியா ஓடியா" என்று.. அந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

இன்று வருவது எல்லாமே கிட்டத்தட்ட கருத்துத் திணிப்புகள்தான். உண்மையான கருத்துக் கணிப்பை யாருமே நடத்துவது போலத் தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையான சார்பு நிலையில்தான் பல கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றன. இதை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வது போலத் தெரியவில்லை. 

கருத்துத் திணிப்புகளே அதிகம்:



ஒரு தொகுதியில் சில நூறு பேரை சந்திக்கிறார்கள்.. அல்லது சில ஆயிரம் பேரை சந்திக்கிறார்கள்.. அவர்கள் சொல்வதை வைத்து மொத்தத் தொகுதிக்கும் ஒரு முடிவை இன்டர்பிரட் செய்கிறார்கள். இது பெரும்பாலும் தவறான முடிவாகவே அமையும். காரணம், உண்மையான கருத்துகளுக்கு மத்தியில் அவர்கள் விரும்பும் கருத்தைத் திணித்து வெளிக் கொண்டு வருவதால். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மக்களை திசை திருப்புவது, குழப்புவது, தடுமாற வைக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

பிரணாய் ராய் முன்பு நடத்த வந்த கருத்துக் கணிப்பு ஒட்டுமொத்த நாட்டையும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கும். காரணம் மிக மிகத் துல்லியமாக, சரியான கணிப்புகளை அவர் கொடுத்து வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் அவர் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு தவறாகப் போனதால் கருத்துக் கணிப்பு நடத்துவதையே என்டிடிவி நிறுத்தி விட்டது. இனிமேல் நாங்கள் கருத்துக் கணிப்பை நடத்த மாட்டோம் என்று முடிவெடுத்தார் பிரணாய் ராய். Ethicsக்கு அவர் கொடுத்த மரியாதை அது. யார் மீதும் கருத்தைத் திணிக்க விரும்பாத ஒரு நிலைப்பாட்டை அப்போது எடுத்தார் பிரணாய் ராய். கடைசி வரை அவர் அதைக் கடைப்பிடித்தார். இப்போது கெளதம் அதானி வசம் என்டிடிவி போன பிறகும் கூட அது கரு்துக் கணிப்புகளை நடத்தாமல்தான் உள்ளது.

முரண்பாடான கணிப்புகள்:

ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துக் கணிப்பு வருகிறது. இதில் பல கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது, மக்களின் மன ஓட்டம், எதார்த்தம், சூழலுக்கு முரண்பாடாக இருப்பதாகவே தோன்றுகிறது. அதை விட முக்கியமாக, யார் யாரோவெல்லாம் கருத்துக் கணிப்பு முடிவு என்று வருகிறார்கள்.. அதையும் பல மீடியாக்கள் மிகப் பெரிதாக கேரி செய்கின்றன, ஒளிபரப்புகின்றன. சமூக வலைதளங்களில் பார்த்தால் யார் என்றே தெரியாத பலரும் கூட கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகள் என்ற பெயரில் எதை எதையோ போட்டுத் தள்ளி வருகின்றனர்.

இதையெல்லாம் படித்துப் பார்த்துதான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற முடிவுக்கு இந்த கருத்துத் திணிப்பாளர்கள் எப்படி வருகிறார்கள் என்று புரியவில்லை. காரணம், தமிழ்நாட்டு மக்கள் வித்தியாசமாக வாக்களிக்கக் கூடியவர்கள். அவர்களைக் கணிக்கவே முடியாது. ஜெயலலிதா தோற்பார் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தபோது மிகப் பெரிய வெற்றியை அறுவடை செய்து அதிர வைத்தவர் அவர். அதேபோல ஸ்டாலின் ஜெயிக்க  மாட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் அதிரடி காட்டிய கட்சி திமுக. நாம் தமிழர் கட்சியை பலரும் குறைத்து மதிப்பிட்டபோது அவர்  அடித்து வாங்கிய  வாக்குகள் அத்தனை கணிப்பாளர்களையும் மிரளச் செய்தது.

தரை லோக்கலுக்கு இறங்கிய நிறுவனங்கள்:

பல  முன்னணி ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளை பார்க்கும்போது, என்னங்கடா இப்படி இறங்கிட்டீங்க என்று சொல்ல வைக்கிறது. அந்த அளவுக்கு தரை லோக்கலாக இறங்கி விட்டனர். மறுபக்கம் துண்டு துக்கடா நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போது தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருக்கிறது. என்ன கணக்கில் இந்த கருத்துக் கணிப்புகளை இவர்கள் நடத்தியுள்ளனர், நடத்தினர், நடத்தி வருகின்றனர் என்றும் தெரியவில்லை.

எது எப்படியோ, மக்களுக்கு இது நல்ல என்டர்டெய்ன்மென்ட்டாக இருக்கிறது. எல்லாம் இன்று மாலை வரைதான்.. அதன் பிறகு மக்கள் கையில்தான் லகான்.. பார்க்கலாம்.. அவர்களது தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை.