ஆபரேஷன் அஜய்:  2வது நாளாக 235 இந்தியர்கள் மீட்பு!

Meenakshi
Oct 14, 2023,03:59 PM IST
டெல்லி: இஸ்ரேலில் நடந்து வரும் போரில் சிக்கியுள்ள இந்தியர்கள் 235  பேர் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு மூலம்  டெல்லி வந்தனர். இதில் 28 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஹமாஸ் நடத்திய எதிர்பாராத தாக்குதலால்  நிலைகுலைந்த இஸ்ரேல் தற்போது ஹமாஸை தீவிரமாக தாக்கி வருகிறது. இப்போர் இன்றுடன் 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இஸ்ரேல் முழு அளவில் போரில் இறங்கி காஸா முனையை சிதைத்து  வருகிறது. உயிரிழப்பைப் பற்றி அது கவலைப்படவில்லை. மாறாக, காஸாவை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி, அந்தப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. 



ஹமாஸை பூமியிலேயே இல்லாத அளவுக்கு அழிக்கவும்  இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. நிலைமை மோசமாகி வருவதால், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்கள் நேற்று தனி விமானம் மூலமாக டெல்லி வந்தனர் . நேற்று வந்த 212 பேரில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில். அவர்களில் 7 பேர் டெல்லியிலிருந்து கோவை சென்றனர்.  மற்றவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர். 

அதனை தொடர்ந்து 2வது நாளாக இன்று 235 பேர் தனி விமானம் மூலமாக டெல்லி வந்தனர். அவர்களில் 28 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது.