தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல்.. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Meenakshi
Jul 31, 2024,05:09 PM IST

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 250 பிடிஎஸ் இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இருந்து 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.




தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் 2, தனியார் மருத்துவ கல்லூரிகள், மூன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கேகே நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியன உள்ளன. அரசு தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம் பி பி எஸ் பி டி எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  https://tnmedicalselection.net மற்றும் https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி ஆன்லைனில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.