வருடத்திற்கு 20 தேர்தல் நடத்துங்க.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

Su.tha Arivalagan
Sep 04, 2023,05:28 PM IST

ஜெய்ப்பூர்: ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பாஜக சொல்வதற்குக் காரணம், மக்களை சந்திக்க அவர்கள் பயப்படுவதால்தான். என்னைக் கேட்டால் 3 மாதத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்களைப் பார்த்து பாஜக பயப்படும் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


ஜெய்ப்பூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் பதவியில் நரேந்திர மோடி 9 ஆண்டுகளைக் கழித்த பிறகும் கூட ஒரே நாடு ஒரு தேர்தல் என்றுதான் பாஜகவால் சொல்ல முடிகிறது. இதைச் சொல்லித்தான் மக்களிடம் அவர்கள் வாக்கு கேட்கும் நிலையில் உள்ளனர் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.




9 வருடம் பிரதமராக இருந்த ஒருவர் ஒரே நாடு ஒரு தேர்தல் என்று சொல்லி வாக்கு கேட்க வருகிறார் என்று சொன்னால் அவர் இதுவரை மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்றுதான் அர்த்தம். அவர் சொல்ல வேண்டிய வாசகம் - ஒரே நாடு ஒரே கல்வி.. ஒரு நாடு ஒரே சிகிச்சை என்பது போன்றவைதான். 


ஆனால் பிரதமர் மோடியோ ஒரே நாடு ஒரே தேர்தல் என்றுதான் சொல்கிறார். இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தால் தலைவர்கள் வருவார்கள்.. வாக்குகளை வாங்கிக் கொள்வார்கள்... தேர்தலின்போது மட்டுமே அவர்களை நீங்கள் பார்க்க முடியும். என்னைக் கேட்டால் 3 மாதத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமு நடத்தப்பட வேண்டும். வருடத்திற்கு 20 முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்தல் வந்தால் மக்களை சந்திக்கவே மோடி பயப்படுவார். அந்தப் பயம் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும். 5 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தினால், சிலிண்டர் விலையை ஐந்து ஆண்டுகளில் ரூ. 5000 வரை ஏற்றி விட்டு, தேர்தல் வரும்போது 200 ரூபாயை மட்டும் குறைத்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 


வருடத்திற்கு 20 முறை தேர்தல் நடத்துங்கள்.  அப்போதுதான் இவர்கள் எல்லாம் மக்கள் முகத்தைப் பார்க்க முன்வருவார்கள் என்று காட்டமாக கூறியுள்ளார் கெஜ்ரிவால்.