தொடரும் "செல்போன் வீச்சு".. பிரதமர் மோடியின் பாதுகாப்பில் மீண்டும் குளறுபடி.. !

Su.tha Arivalagan
May 01, 2023,01:21 PM IST

மைசூரு: கர்நாடகத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் மீண்டும் மீண்டும் குளறுபடி ஏற்பட்டு வருவது அவரது பாதுகாப்புப் படையினருக்கு பெரும் கவலையைத் தருவதாக உள்ளது.


கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் தேசியத் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா, ராகுல் காந்தி என பலரும் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


நாட்டிலேயே உச்சபட்ச பாதுகாப்பைக் கொண்டுள்ளவர் பிரதமர் நரேந்திர மோடி. பஞ்சாப் மாநிலத்தில் அவர் ஒரு நிகழ்ச்சிக்காக போய்க் கொண்டிருந்தபோது வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் நடுப் பாலத்தில் சிறிது நேரம் பிரதமர் காத்திருந்தார். அப்போது அது பெரும் பாதுகாப்பு குளறுபடியாக கூறப்பட்டது. பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.


ஆனால் கர்நாடகத்தில் அடுத்தடுத்து 4 முறை அவரது பாதுகாப்பு மிகப் பெரிய அளவில் குளறுபடியைச் சந்தித்துள்ளது. 


முதல் சம்பவம்:   ஜனவரி 12ம் தேதி முதல் சம்பவம் நடந்தது.  கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி நகரில் தேசிய இளைஞர் மாநாட்டைத் தொடங்கி வைக்க பிரதமர் வந்தார். அப்போது ரோடு ஷோ ஒன்றை அவர் நடத்தினார். அப்போது ஒரு சிறுவன் திடீரென பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி உள்ளே நுழைந்து பிரதமரை நோக்கி ஓடினான். பிரதமருக்கும், அந்த சிறுவனுக்கும் இடையிலான இடைவெளி மிக மிக குறுகியதே. கையில் மாலையுடன் அந்த சிறுவன் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமரிடம் அந்த மாலையையும் அவன் கொடுத்தான். பிரதமர் அதை வாங்கி பாதுகாப்புப்படையினரிடம் கொடுத்தார்.


2வது சம்பவம்: தாவணகரேவில் இன்னொரு சம்பவம் நடந்தது.  அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் ரோடுஷோ நடந்தபோது அவரை நோக்கி ஒரு இளைஞர் வேகமாக ஓடி வந்தார். பாதுகாபுப் படையினர் குறிப்பிட்ட தொலைவில் வைத்து அவரை மடக்கிப் பிடித்து விட்டனர். இந்த சம்பவம் மார்ச் மாதம் நடைபெற்றது.


3வது சம்பவம்: ஏப்ரல் 25ம் தேதி 3வது சம்பவம் நடைபெற்றது. இது கேரளாவில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் ரோடுஷோ நடத்தினார். அப்போது அவரது ஜீப்பை நோக்கி ஒரு செல்போன் பறந்து வந்தது. இதனால் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு பாதுகாப்பு வீரர் சரியான சமயத்தில் செல்போனை கையில் பிடித்து விட்டார். விசாரணை நடத்தியதில் ஆர்வக் கோளாறில் போனைத் தூக்கி வீசியதாக அதன் உரிமையாளர் கூறவே அவரிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது.


4வது சம்பவம்: இந்த நிலையில் தற்போது கர்நாடகத்திலும் இதேபோன்ற ஒரு செல்போன் வீச்சு நடந்துள்ளது.  மைசூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு ரோடுஷோ நடத்தினார். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவர் பயணித்தபோது அவரை நோக்கி செல்போன் பறந்து வந்தது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


உடனடியாக செல்போன் வீசிய பெண்மணியைப் பிடித்து விசாரித்தபோது அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. ஆர்வத்தில் போனை வீசியதாக அவர் கூறவே அவரிடம் செல்போனை கொடுத்த பாதுகாப்புப் படையினர் எச்சரித்து அனுப்பி விட்டனர். இருப்பினும் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்துள்ளார்.


பிரதமர் பயணத்தில் இப்படி அடிக்கடி பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படுவது அவரது பாதுகாப்புப் படையினரை கவலை கொள்ள வைத்துள்ளது.