சென்னையில் மீண்டும் ஒரு நாய்க்கடி.. 11 வயது சிறுவன் காயம்.. வேளச்சேரியில் பரபரப்பு

Manjula Devi
May 08, 2024,03:13 PM IST

சென்னை: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாய் கடித்து சிறுமி காயமடைந்த நிலையில், தற்போது மீண்டும் அஸ்வந்த் என்ற 11 வயது சிறுவனை நாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. 


சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வருபவர் அஸ்வந்த் என்ற 11 வயது சிறுவன். தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோடை விடுமுறையைக் களிப்பதற்காக சிறுவன் அஸ்வந்த் ஆலத்தூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தனது அத்தை வீட்டிற்கு வந்துள்ளார்.


நேற்று மாலை அஸ்வந்த் விளையாடிக் கொண்டிருக்கும்போது அதே பகுதியில் ஒரு வீட்டில்  சைப்ரீயன் ஹஸ்கி வகை நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். திடீரென அந்த நாய் சிறுவனை கடித்தது. இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறினான். இதனை அறிந்து உடனே சிறுவனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவன் அஸ்வந்த் பெற்றோர் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 




புகாரின் அடிப்படையில் நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ராட்வெய்லர் வகை நாய் ஒன்று கடித்து  குதறியது. அதேபோல் மீண்டும் சிறுவனை நாய் கடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.