ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் .. 2.40 லட்சம் பிளாஸ்டிக் துகள்கள்.. கேட்கவே அதிர்ச்சியா இருக்குல்ல!!

Su.tha Arivalagan
Jan 09, 2024,05:59 PM IST

டெல்லி: கடைக்குப் போறோம்..  "அண்ணா ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ப்ளீஸ்" என்று கேட்கிறோம்.. கடைக்காரரும் தருவார்.. வாங்கி மூடியைத் திறந்து தண்ணீர் குடித்து விட்டு.. திரும்ப மூடி பேகின் சைடில் செருகிக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறோம்.. எல்லோரும் செய்வதுதான் இது.. ஆனால் அந்த வாட்டர் பாட்டிலில் என்னெல்லாம் அடங்கியிருக்கிறது என்று தெரியுமா?


கேட்டாலே அதிர்ச்சியாகி விடும்.. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்கள் அடங்கியுள்ளதாம். அதாவது இந்த அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சேர்ந்துதான் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் உருவாகிறதாம். இந்த அளவுக்கு பிளாஸ்டிக் துகள்களுடன் உருவாகும் வாட்டர் பாட்டில்களால் ஏற்படும் உடல் நலக் கேடுகள் அளவிட முடியாத அளவுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி இதுதொடர்பான பதை பதைக்க வைக்கும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாத நானோ பிளாஸ்டிக்கள்  பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் அடங்கியிருப்பதாக இது கூறுகிறது. நானோ பிளாஸ்டிக் என்பது, நீளத்தில் 1 மைக்ரோமீட்டருக்கும் குறைவானது. விளங்கும் படி சொல்வதனால், நமது தலைமுடியின் அகலத்தில் ஏழில் ஒரு பங்கு ஆகும்.


இதற்கு முன்பு கணித்ததை விட 100 மடங்கு அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் வாட்டர் பாட்டிலில் இருக்கலாம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களின் உடல் நலனுக்கு மிகப் பெரிய கேடு விளைவிக்கக் கூடியது இந்த நானோ பிளாஸ்டிக் எனப்படும் பிளாஸ்டிக் நுன் துகள்கள். மிகவும் நுன்னியதாக இருப்பதால் மனித உடலில் செல்களுக்குள் எளிதாக இவை புகுந்து விடும். ரத்தத்திற்குள் புகுந்து விடும், உடல் உறுப்புகளைப் பாதிக்கும். பிளசன்டா எனப்படும் தொப்புள் கொடி மூலம் கருவுக்குள்ளும் கூட புகுந்து விடும் அபாயம் கொண்டது இந்த நானோ பிளாஸ்டிக்குகள்.




அமெரிக்காவின் மிகப் பிரபலமான 3 பிராண்டுகள் பயன்படுத்தி வரும் வாட்டர் பாட்டில்களை இதற்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர் விஞ்ஞானிகள். இந்த வாட்டர் பாட்டில்கள் ஒவ்வொன்றிலும் சராசரியாக 1 லட்சத்து 10 ஆயிரம் முதல் 3 லட்சத்து 70 ஆயிரம் சிறு பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது  தெரிய வந்தது. இதில் 90 சதவீதம் நானோ பிளாஸ்டிக்தான். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆய்வு முடிவுகள் வந்திருப்பதால் இதுதொடர்பான ஆய்வுகள் மேலும் வேகம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது நாம் பயன்படுத்தி வரும் வாட்டர் பாட்டில்கள் பெருபாலும் பாலி எத்திலீன் டெரிபதலேட் (பெட்) என்ற வேதிப் பொருளாலல் ஆன பிளாஸ்டிக் பாட்டில்கள்தான். இதில்தான் அபாயம் அதிகமாாக இருக்கிறதாம். 




உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 450 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் காரணமாக உலகம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு அழிவே கிடையாது, அவற்றை அழிக்கவும் முடியாது. இதனால் அபாயமும் அழியாமல் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இயற்கையாக அழிக்க முடியாத பிளாஸ்டிக்கை துண்டு துண்டாக, துகள்களாக மாற்றித்தான் வாட்டர் பாட்டில் போன்றவை தயாரிக்கப்படுகின்றன என்பது அபாயகரமான உண்மையாகும்.


இனிமேல் வாட்டர் பாட்டிலை வாங்கி தண்ணீர் குடிக்கும்போது தயவு செய்து இதை நினைச்சுக்கோங்க.. !