"ஓணம் வந்தல்லோ".. எகிறும் பூக்களின் விலை.. களை கட்டும் கன்னியாகுமரி!

Su.tha Arivalagan
Aug 28, 2023,11:19 AM IST
நாகர்கோவில்: மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வந்து விட்டது. கேரள மாநிலம் மட்டுமல்லாமல், மலையாள மொழி பேசும் மக்கள் உள்ள பகுதிகள் எல்லாமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஜாதி, மத வேறுபாடின்றி பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறார்களோ அதேபோல மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுவது ஓண் ஆகும்.

'கொல்லவர்ஷம்' என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான" சிங்கம்" மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இறுதியில் வரும் திருவோணம் நட்சத்திரத்தன்று ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.



இதனை கேரள மக்கள் அறுவடை திருநாள் என்றும் அழைப்பர். மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னனை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளில் அத்தப் பூ கோலங்கள் போட்டு அலங்கரிப்பார்கள். இந்த 10 நாட்களும் மலையாளம் மக்கள் தங்கள் வீட்டு வாசலில் பல்வேறு வண்ண வண்ண மலர்களால் பூ கோலம் இடுவார்கள். இதற்கு 'அத்தப்பூ' என்று பெயர்.

ஓணம் பண்டிகையில் இது மட்டுமல்லாமல் மற்றொரு சிறப்பு யானையின் அணி வரிசையாகும். பத்தாம் நாள் விழாவான ஓணத்தன்று யானைகளை விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் அலங்கரித்து பூ தோரணமிட்டு அலங்காரம் செய்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். பின்னர் யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் வழங்கப்படும்.

மேலும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகள் தயாரிக்கின்றனர். இந்த உணவை "ஓண சத்யா" என்று அழைப்பர் .இந்த உணவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தி பரிசினை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஒவ்வொரு நாட்களும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படும் இந்த ஓணத் திருவிழாவின் 10 வது நாளான திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை வெகுமிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பூக்களுக்கு டிமாண்ட்

கேரள மக்கள் பாரம்பரிய நடன வடிவங்களான திருவாதிரை களி மற்றும் புலி களி (புலி ஆட்டம்) போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். அன்றுதான் கேரளா மக்கள் பாரம்பரிய நடனம், வண்ண மலர்களால் தெருக்களெங்கும் பூ கோலம், தோரணம் மற்றும் யானை ஊர்வலம் என்று விழா களைகட்டி இருக்கும்.

இதனால் கேரள மாநிலத்திற்கு நிறைய விதவிதமான பூக்கள் தேவைப்டும். கேரளத்தைச் சுற்றி உள்ள நகரங்களில் இருந்தும் அண்டை மாநிலத்தில் இருந்தும் பூக்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும். அதனால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, திருநெல்வேலி, கோவை, தேனி போன்ற மாவட்டத்தில் உள்ள மலர்கள் சந்தையில் பூக்களின் விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது.  

இதனால் கேரள வியாபாரிகள் பெருமளவில் வரத் தொடங்கியதால் பூக்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் மல்லிகை, செண்டு பூ, துளசி, சம்பங்கி, பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ் போன்றவை பெருமளவில் விற்பனையாகிறது. தற்போது சுப முகூர்த்தம் என்பதாலும் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு பூக்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதாலும் மல்லிகைப் பூக்களின் விலை கிலோ ₹ 1000 வரை உயர்ந்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து கொண்டே போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.