மக்களே இதைக் கவனிங்க.. 3 நாட்களுக்கு.. பெருங்களத்தூர் பக்கம் ஆம்னி பஸ்கள் வராது!

Su.tha Arivalagan
Nov 08, 2023,04:43 PM IST

சென்னை:  காவல்துறையின் உத்தரவுப்படி, நவம்பர் 9 முதல் 11ம் தேதி வரை செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் ஆம்னி பஸ்கள் பெருங்களத்தூர் வழியாக இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக  செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடில் புறப்பட்டு நாசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும்.




இந்த தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவுப்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.  எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச் செல்லலாம். கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல இயக்கப்படும்.




ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி  உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் http://www.aoboa.co.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை  9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று சங்கத் தலைவர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.