கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்துதான்.. ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும்.. அமைச்சர் சேகர்பாபு

Meenakshi
Jan 24, 2024,06:09 PM IST

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பஸ் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து தான் பயணிகளை ஏற்றி இறக்க  வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை மீறி செயல்படும் ஆம்னி பஸ்களின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 


ஆனால் பேருந்துகளை நிறுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் போதிய இடவசதி, பயணிகள் எளிதில்  கிளாம்பாக்கம் அடையும் வசதி போன்றவற்றை செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த 21ம் தேதி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு இன்று கூறுகையில், இன்று முதல் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து செயல்படாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது.


மக்களுடைய தேவை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் அரசு செயல்பட முடியும். தமிழக அரசிற்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்ல உறவு நீடிக்கும். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளித்த வாக்குறுதிக்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்கள் வசதிக்காக திட்டமிட்டு கட்டப்பட்டது. ஆம்னி பஸ்களுக்கு ஏற்றார் போல் கிளாம்பக்கத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.


போக்குவரத்து ஆணையர் உத்தரவு


ஈசிஆர் ரோடு வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகளைத் தவிர்த்து, பிற ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. நகருக்குள் இந்த ஆம்னி பேருந்துகள் வரக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த புதிய மோதலால் வெளியூர்களுக்குப் போக ஆம்னி பேருந்துகளில் புக் செய்து வைத்துள்ள பயணிகள் குழப்பமும் கவலையும் அடைந்துள்ளனர்.