ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்.. அரசுடன் பேச்சுவார்த்தை சுமூகம் என்று தகவல்!

Su.tha Arivalagan
Oct 24, 2023,03:30 PM IST

சென்னை: ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இன்று மாலை 6 மணி முதல் நடத்தவிருந்த ஸ்டிரைக் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெளிமாநிலத்திற்கும், தொலைதூரம் செல்ல வேண்டிய இடங்களுக்கும் மக்கள் தங்களின் வசதிக்காக ஆம்னி பஸ்சையே தேர்வு செய்கின்றனர்.


தொடர் அரசு விடுமுறை முடிந்து இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சொந்த ஊர் திரும்ப இலட்சக்கான மக்கள் தயாராக உள்ளனர். இந்நிலையில் ஆம்னி  பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக கூறி 120 ஆம்னி பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை பறிமுதல் செய்தது.




இதனை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஸ்டிரைக் செய்யப் போவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்தன. இதனால் பயணிகளிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்ல ஏறக்குறைய ஒரு லட்சம் பயணிகள் ஆம்னி பேருந்திற்காக முன்பதிவு செய்துள்ளனர்.  இந்நிலையில் இன்று மாலை ஆறு மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது என அறிவித்தது மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. 


இதனால் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல உள்ள பயணிகள் என்ன செய்வதென்று அறியாமல் குழப்பத்தில் மூழ்கினர். ஆனால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்தது.  இந்த நிலையில் தற்போது அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, தங்களது கோரிக்கைகளை ஏற்பதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாகவும், வழக்கம் போல ஆம்னி பேருந்துகள் ஓடும் என்றும் தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் குழப்பம் தீர்ந்துள்ளது