கிளாம்பாக்கத்தில் வசதி இல்லை.. கோயம்பேட்டிலிருந்துதான் பஸ்களை இயக்குவோம்.. உரிமையாளர்கள் பிடிவாதம்!

Su.tha Arivalagan
Jan 24, 2024,06:10 PM IST

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில், ஆம்னி பஸ்களுக்கு உரிய வசதிகள் இல்லை. எனவே அங்கிருந்து பஸ்களை இயக்க முடியாது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்துதான் பஸ்களை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளது, தமிழ்நாடு அரசுக்கு சவால் விடுப்பது போல உள்ளது.


சென்னை நகருக்குள் முன்பு பிராட்வேயில்தான் மத்திய பேருந்து நிலையம் இருந்து வந்தது.  மக்கள் தொகை அதிகரித்து, சென்னையில் போக்குவரத்து மிகப் பெரிய அளவில் மாறிய பின்னர் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு திமுக ஆட்சியில் கோயம்பேட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிட்டப்பட்டு, அது ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நிறைவடைந்து பஸ் நிலையம் அமலுக்கு வந்தது.




இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையமும் தற்போது நிரம்பி வழிகிறது. நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இன்னும் மோசமாகி விட்டது. இதையடுத்து வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் திட்டமிடப்பட்டு தற்போது திமுக ஆட்சியில் அது திறக்கப்பட்டுள்ளது.


கோயம்பேடு பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோது என்ன மாதிரியெல்லாம் சிக்கல்கள் வந்ததோ கிட்டத்தட்ட அதே போல இப்போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்திற்கும் சிக்கல்கள் வருகின்றன. ஒவ்வொரு குறையையும் அரசு சரி செய்து வருகிறது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தற்போது மக்களுக்குப் பழக ஆரம்பித்து விட்டது. ஆனால் ஆம்னி பஸ்கள் மட்டும் இன்னும் இந்த பஸ் நிலையத்துக்குள் வராமல் உள்ளன. அங்கு வர மறுக்கின்றன.


மேலும் எங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்துதான் பஸ்களை இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது அரசை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அறிக்கை விட்ட அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்துதான் ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும். கோயம்பேட்டுக்குப் போகக் கூடாது என்று அதிரடியாக அறிவித்தார். 


ஆனால் அங்கு போக முடியாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் இன்று கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கிளாம்பாக்கத்திலிருந்துதான் பஸ்களை இயக்க வேண்டும் என்று கூறி அரசிடமிருந்து எந்த சுற்றறிக்கையும் இதுவரை வரவில்லை.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எங்களுக்கு உரிய வசதிகள் இல்லை. திடீரென அங்கு போய் இயங்க வேண்டும் என்று சொன்னால் சரியாக இருக்காது. எங்களுக்கு கிளாம்பாக்கத்தில் வசதிகள் தேவை. அதுவரை கோயம்பேட்டிலிருந்துதான் இயங்க முடியும். இதுவரை 2 லட்சம் பேர்  பயணிகள் புக் செய்துள்ளனர். இன்று மட்டும் 60,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.


திடீரென பஸ் நிலையத்தை மாற்றினால் அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள். தொடர் விடுமுறையால் ஊர்களுக்குச் செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என்றார் அவர்.


இதற்கிடையே, ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளுடன், சிஎம்டிஏ அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.