சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

Meenakshi
Feb 29, 2024,05:49 PM IST

சென்னை:  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு  வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிக்கிய ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் இந்த 7 பேருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டு  தீர்ப்பு வழங்கப்பட்டது. மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 




இந்தநிலையில் தமிழக அரசு மற்றும் இலங்கை தமிழ் ஆதரவு அமைப்புகளின் முயற்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் ஒருவரான  இலங்கையைச் சேர்ந்த சாந்தன் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார். இலங்கையை சேர்ந்த சாந்தன் சொந்த நாடு திரும்ப முடியாமல் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். விடுதலைக்குப் பிறகு, சொந்த நாட்டிற்கு செல்ல நினைத்த சாந்தன் மத்திய அரசிற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். 


அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு இலங்கை செல்ல அனுமதி அளித்திருந்த நிலையில், திடீர் என கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று காலமானார். இந்நிலையில், சாந்தனின் உடலை கொண்டுசெல்ல இலங்கை தூதரக அனுமதி, இறப்பு சான்று, பயண ஆவணம் உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.