"முதல்ல  1 ரூபாய் போடுவோம்".. மகளிர் உரிமைத் தொகை திட்ட ஏற்பாடுகள் தடபுடல்!

Su.tha Arivalagan
Sep 13, 2023,02:37 PM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் முதல் கட்டமாக அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கும் ரூ.  1 அனுப்பி சோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

மேலும் யாரெல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனரோ அவர்களுக்கெல்லாம் உங்களைத் தேர்வு செய்துள்ளோம் என்ற எஸ்எம்எஸ்ஸும் அனுப்பப்படுகிறது. அதேபோல நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் கூட அதற்கான காரணத்தை விளக்கி குறுஞ்செய்தியை அதிகாரிகள் அனுப்புகிறார்களாம்.



திமுக அரசின் மிகப் பெரிய திட்டம் எது என்றால் அது இதுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வர்ணித்துள்ள திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படவுள்ளது. மிகப் பெரிய திட்டமாக பார்க்கப்படும் இதில் எந்தவிதமான தவறும் நடந்து விடக் கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக மிக கவனமாக இருக்கிறார்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இதுவரை 1,06,50,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வங்கிக் கணக்குகளில் தற்போது ரூ. 1 வரவு வைக்கப்பட்டு வருகிறதாம். அதாவது போடும் பணம் சரியாக போகிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஆளுக்கு ஒரு ரூபாய் கணக்கில் போடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதுவும் பரிசோதிக்கப்படுகிறது.

திமுக அரசின் மாபெரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.