ஊட்டி, கொடைக்கானலில்.. இன்று முதல் இ பாஸ் இருந்தால்தான் அனுமதி.. செக் செய்யும் அதிகாரிகள்!

Manjula Devi
May 07, 2024,05:19 PM IST

சென்னை: ஊட்டி மற்றும் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் அப்பகுதிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள மலைப் பகுதிகளான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் வாகன நெரிசலை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை காக்கவும், இ பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 


ஊட்டி: 

ஊட்டியில் தனியார் வாகனங்களுக்கு தான் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் மற்றும் அரசு  சார்ந்த வாகனங்கள், உள்ளூர் வாகனங்களில் பயன்படுத்தப்படும் டி என் 43 பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் நடைமுறை கிடையாது என  அறிவித்துள்ளது. 


மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல  கூடிய கல்லார் என்ற பகுதியில் இபாஸ்  சோதனை நடைபெற்று வருகிறது. இங்கு வைத்து வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.  இந்தப் பகுதிகளில் வரக்கூடிய தனியார் வாகனங்கள் இ-பாஸ் எடுக்கப்பட்டு இருக்கிறதா.. எத்தனை பேர் வருகிறார்கள்.. அவர்கள் எத்தனை நாட்கள் அங்கு தங்குகிறார்கள்.. போன்ற விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் தான் கல்லாரிலிருந்து ஊட்டிக்கு செல்ல அதிகாரிகள் வாகனங்களை அனுமதிக்கின்றனர்.


கொடைக்கானல்:




கொடைக்கானலில் மூன்று பிரிவுகளாக இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி உள்ளூர் வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் சோதனை கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நடைபெற்று வருகிறது. 


கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய நான்கு பகுதிகளில்  சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அப்பகுதிகளில் வரக்கூடிய வாகனங்களுக்கு இ-பாஸ் எடுக்கப்பட்டுள்ளதா என்பது போன்ற சோதனை நடைபெற்று வருகிறது. இது பற்றிய முறையான அறிவிப்பு தெரியாத அண்டை மாநில வாகனங்களுக்கும் அப்பகுதிகளில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில்   முறையாக இ-பாஸ் எடுத்த பின்னரே வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.