பென்ஷன் வாங்க.. பிளாஸ்டிக் சேரை வாக்கராக மாற்றி.. வெறுங்காலுடன் நடந்து செல்லும் மூதாட்டி!

Su.tha Arivalagan
Apr 21, 2023,10:57 AM IST
ஜாரிகான், ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் வெறும் காலுடன், ஒரு பிளாஸ்டிக் சேர் துணையுடன் பல கிலோமீட்டர்கள் தூரம் தாங்கித் தாங்கி நடந்து சென்று பென்ஷன் வாங்கும் கொடுமையான வீடியோ வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.

அவரது வீட்டை விட்டு வெகு தூரத்தில்  அவர் பென்ஷன் வாங்கும் வங்கி உள்ளது. பென்ஷன் வாங்க ஒவ்வொரு முறையும் அவர் நடந்துதான் செல்கிறார். அதுவும் வெறும்காலுடன்தான் போகிறார். நடக்க முடியாத நிலையில், ஒரு உடைந்த பிளாஸ்டிக் சேரை "வாக்கர்" போல பயன்படுத்திக் கொண்டு அவர் சாலையரமாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.



ஒடிஷா மாநிலம் நப்ரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாரிகான் என்ற கிராமத்தில்தான் இந்த கொடுமை. அந்தப் பெண்ணின் பெயர் சூரியா ஹரிஜன். மிக மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மூத்த மகன் புலம் பெயர் தொழிலாளியாக பல்வேறு மாநிலங்களிலும் வேலை பார்த்து வருகிறார். தனது இளைய மகனுடன்தான் இவர் தங்கியிருக்கிறார். வயிற்றுப் பாட்டுக்காக ஆடு மாடு மேய்ப்பதை வழக்கமாக்கியுள்ளார். இவர்களுக்கென்று சொந்தமாக ஒரு அங்குலம் நிலம் கூட கிடையாது. மிக மிக கஷ்டமான வாழ்வாதாரத்தைக் கொண்ட குடும்பம்.

இவருக்கு முதியோர் உதவித் தொகை வருகிறது. ஆனால் அதை வாங்க வங்கிக்குச் சென்றாக வேண்டும். வங்கியோ வெகு தூரத்தில் உள்ளது. எனவே நடந்துதான் போகிறார், வருகிறார். செருப்பு கூட கிடையாது. வெறுங்காலுடன்தான் செல்கிறார். நடக்கவும் முடியாது. இதனால் ஒரு பிளாஸ்டிக் சேரை, அதுவும் உடைந்து போயுள்ளது. அதை வாக்கர் போல பிடித்துக் கொண்டு தாங்கித் தாங்கி நடந்து செல்கிறார்.

இதில் என்ன கொடுமை என்றால் இவருக்கு கையெழுத்துப் போடத��� தெரியாது , கைநாட்டுதான். ஆனால் விரல்கள் நடுங்குவதால் கைநாட்டையும் கூட சரியாக வைக்க முடியாமல், பணத்தைத் தர வங்கி மறுக்கிறதாம். இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் வங்கி நிர்வாகம் விழி பிதுங்கியுள்ளது. கையெழுத்து அல்லது கைநாட்டு இல்லாமல் பணத்தைத் தர விதிமுறை இடம் தரவில்லையே என்று வங்கி மேலாளர் கையைப் பிசைகிறார்.

இருந்தாலும் அந்த பாட்டியின் நிலையை மனதில் கொண்டு தங்களது கையிலிருந்து ரூ. 3000 கொடுத்து அனுப்புகிறார்களாம். விரைவில் இந்தப் பிரச்சினை சரி செய்யப்படும் என்று மேலாளர் கூறியுள்ளார்.

என்ன கொடுமை இது!