ஜப்பானில் இருந்து.. ஆன்லைனில் கேபினட் கூட்டத்தை நடத்திய.. ஒடிஷா முதல்வர்!

Su.tha Arivalagan
Apr 10, 2023,04:55 PM IST
புபனேஸ்வர்: ஒடிஷா முதல்வர் நவீந் பட்நாயக் 6000 கிலோமீட்டருக்கு அப்பால்  இருந்தபடி, ஆன்லைனிலேயே அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி அசர வைத்துள்ளார்.

அதாவது ஜப்பானிலிருந்து கொண்டு இந்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியா மாநில அரசு ஒன்றின் அமைச்சரவைக் கூட்டத்தை ஒரு முதல்வர் நடத்தியது இதுவே முதல் முறையாகும்.



ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார் நவீன் பட்நாயக். ஜப்பானிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமாகும் இது. கியோட்டோ நகரில் முகாமிட்டுள்ள அவர்  நேற்று அங்கிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். தலைநகர் புபனேஸ்வரிலிருந்து கியோட்டோ நகரமானது 6000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அமைச்சர்களும் பல்வேறு இடங்களில் இருந்தனர். அவரவர் இருந்த இடத்திலிருந்தபடியே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு அமைச்சர்களும் இருந்த இடத்திலிருந்தே அவற்றுக்கு கையெழுத்திட்டனர்.

தொழில்நுட்பத்தால் நிறைய நல்லது செய்ய முடியும். மக்களுக்கான சேவைகளை மிகச் சிறப்பாக செய்ய தொழில்நுட்பம் உதவி புரிகிறது. அதைத்தான் இந்த அமைச்சரவைக் கூட்டமும் நிரூபித்துள்ளது என்றார் நவீன் பட்நாயக்.

தொழில்நுட்ப வசதியால் இப்படியும் அரசாட்சி நடக்கிறது.. ஆனால் சில மாநிலங்களிலோ ஆன்ட்ராய்ட் போனை வைத்துக் கொண்டு சட்டசபையில் சில எம்எல்ஏக்கள் "சீன் படம்" பார்க்கும் சம்பவங்களும் நடந்துள்ளது, நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!