"தாத்தா பேட் வேணும்".. கோரசாக கேட்ட குட்டீஸ்..  உடனே வாங்கிக் கொடுத்த ஓபிஎஸ்!

Aadmika
Apr 10, 2023,11:59 AM IST

பெரியகுளம் : தன்னிடம் கிரிக்கெட் பேட் வேண்டும் என கேட்ட சிறுவர்களை வீட்டிற்கே அழைத்து கிரிக்கெட் பேட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை பரிசாக அளித்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 


ஜெயலலிதாவால் முதல்வர் பதவியில் அமர வைத்து  அழகு பார்க்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அவரது விசுவாசம் அவருக்கு முதல்வர் பதவியை தேடி வந்து கொடுத்தது. ஜெயலலிதா இருந்தவரை ஓ.பி.எஸ் அதிமுகவில் முக்கியத்துவம் தரப்பட்டார்.


ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிசலாவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. கட்சியை விட்டு வெளியே வந்தார். தர்மயுத்தம் நடத்தியது, முதல்வர் பதவியில் இருந்து விலகியது, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது, அதிமுக.,வில் இருந்து வெளியேற்றப்பட்டது, பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து கோர்ட்டுக்கு போனது என அதிமுக.,வில் அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறார்.


தற்போது அனைத்து விதமான சட்ட போராட்டங்களிலும் தோல்வியுற்றுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி வசம் போய் விட்டது.  ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன போகிறார் என தமிழக அரசியல் வட்டாரமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில் அவரது அணியின் தேனி மாவட்ட செயலாளர் சோலைமுருகன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓபிஎஸ்.,ன் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சிறுவர்கள் சிலருக்கு ஓபிஎஸ், ஏதோ பரிசாக வழங்குவது போன்ற போட்டோவை வெளியிட்ட அவர், " மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர் ஐயா ஓபிஎஸ் அவர்கள் மதுரையில் இருந்து பெரியகுளம் வரும் வழியில் சிறுவர்கள் அவரிடம் கிரிக்கெட் பேட் வேண்டும் என கேட்டனர். உடனே அந்த சிறுவர்களை வீட்டிற்கு அழைத்து புதிய கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். 


இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், "என்ன ஓபிஎஸ் இப்படி ஆகிட்டார்? ", "எதுக்கு இந்த விளம்பரம்"  என கமெண்ட் செய்து வருகின்றனர். ஏதாவது அதிரடியாக செய்து, அரசியலில் பரபரப்பை கிளப்புவார் என எதிர்பார்த்தால், இவர் இப்படி சின்ன பசங்களுக்கு கிரிக்கெட் வாங்கிக் கொடுத்து அதை கூட விளம்பரப்படுத்திக்கிட்டு இருக்காரே என கிண்டல் செய்து வருகின்றனர். இருந்தாலும் தாத்தா என்று பாசத்துடன் பேட் கேட்ட சிறார்களுக்கு பேட் வாங்கிக் கொடுத்து அதை அவர்கள் சந்தோஷமாக வாங்கியதைப் பார்த்து பூரித்து நிற்கும் ஓ.பி.எஸ் முகத்தில் அரசியல் தெரியவில்லை.. மாறாக பாசம்தான் தெறிக்கிறது என்று பலரும் இதைப் பாராட்டி வருகின்றனர்.