ராமநாதபுரத்துக்காரங்களை முட்டாள்கள்னு நினைச்சீங்களா.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் மகன் கேள்வி!

Su.tha Arivalagan
Mar 27, 2024,02:07 PM IST

சென்னை:  ராமநாதபுரத்தில்  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக வேண்டும் என்றே அவரது பெயரில் சிலரை கூட்டி வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு என்று ஓபிஎஸ்ஸின் மகன் ஜெய பிரதீப் குற்றம் சாட்டியுள்ளார்.


பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓ. பன்னீர் செல்வம், சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவரது பெயரிலேயே மேலும் சிலர் அங்கு சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




இதுகுறித்து  ஓபிஎஸ்ஸின் மகன் ஜெய பிரதீப் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


அய்யா அவர்கள் திங்களன்று ராமநாதபுரத்தில் வெற்றி வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது அவர் மதுரையிலிருந்து வரும் வழி நெடுகிலும் 2000க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்கள் தன்னெழுச்சியாக வரவேற்று மிகுந்த இன்முகத்துடன் வெற்றிக்கனியை அய்யா அவர்களுக்கு தேர்தல் களத்தில் சமர்ப்பிப்போம் என்று அவர்கள் முகத்தில் தெரிந்தது. 


அதனைக் கேள்விப்பட்ட சூழ்ச்சிகார எடப்பாடி கும்பலின் அல்லக்கைகள் சிலர், அய்யா பெயரில் ஐந்து நபர்களை தமிழு்நாடு முழுவதும் இருந்து வரவழைத்து அந்த அப்பாவிகளைக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதை நான் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. 


எங்களது ராமாதபுரம் மக்களை எந்த அளவுக்கு நீங்கள் நினைத்துள்ளார்கள். முட்டாள்கள்னு நினைக்கறீங்களா. எங்களது மக்கள் மிகவும் தெளிவாக தர்மத்தின் பக்கம்,  நியாயத்தின் பக்கம் வாக்களிக்க கூடியவர்கள். அவர்களது வாக்கு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நாளன்று எதிரொலிக்கும். ரிசல்ட், ஜூன் மாதம் தெரிய வரும்போது உங்களது சூழ்ச்சிகார கும்பலின் முகத்தில் கரியைப் பூசுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.