திடீரென ரஜினிகாந்த்தை சந்தித்த ஓ.பி.எஸ்.. ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை!

Su.tha Arivalagan
Sep 02, 2023,02:54 PM IST

சென்னை: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்து பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பலரை சந்தித்து திரும்பியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திடீரென சந்தித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை முடித்த கையோடு வட மாநில சுற்றுப்பயணம் செய்தார். இமயமலைக்கு முதலில் விசிட் அடித்த அவர் அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் போனார். அங்கு முன்னாள் பாஜக பிரமுகரும் தற்போது அந்த மாநில ஆளுநராக இருப்பவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்துக்குப் போனார் ரஜினிகாந்த்.




பாஜக ஆளும் உ.பி. மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினார். அப்போது அவரது காலிலும் விழுந்து ஆசி வாங்கினார். அதைத் தொடர்ந்து சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவை சந்தித்துப் பேசினார் ரஜினிகாந்த். கூடவே ராஜா பையா என்ற முன்னாள் தாதாவையும் சந்தித்துப் பேசினார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜன சத்தா தளம் லோக்தந்திரிக் என்ற கட்சியின் தலைவராக இருக்கிறார்.


ஜெயிலர் பட ரிலீஸுக்கு முன்பு கிளம்பிச் சென்ற அவர் ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தமிழ்நாடு திரும்பினார். இந்த நிலையில் அவரை இன்று திடீரென அவரது வீட்டுக்கு வந்து சந்தித்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இது என்ன காரணத்திற்கான சந்திப்பு என்று தெரியவில்லை.


அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தனித்து செயல்பட்டு வருகிறார் ஓ.பி.எஸ். அதிமுகவைக் கைப்பற்ற அவர் எடுத்து வரும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்து வருகிறது. தொடர்ந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் அவர்.  தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களை சந்திக்கவும் ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார்.


இந்தப் பின்னணியில் இன்று ரஜினிகாந்த்தை ஓ.பி. எஸ். சந்தித்திருப்பது பரபரப்பையும், சலசலப்பையும், பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.  இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓ.பி.எஸ் தரப்பு கூறினாலும் கூட அரசியல் ரீதியான சந்திப்பாக இது இருக்குமோ என்ற பரபரப்பும் நிலவுகிறது. அல்லது அதிமுக  தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ரஜினியை, பாஜக தரப்பு இறக்கியிருக்கிறதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.