தொடை தட்டி மீசையை முறுக்கி.. சட்டசபையை அதிர வைத்த "பாலய்யா"!

Meenakshi
Sep 21, 2023,05:11 PM IST
அமராவதி: சினிமாவில் செய்வது போல, தொடையைத் தட்டி மீசையை முறுக்கி சட்டசபையில் கெத்து காட்டினார் நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவுமான என்டிஆர் பாலகிருஷ்ணா. பதிலுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் பாயத் தயாரானதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.  ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



இந்த நிலையில் ஆந்திர மாநில சட்டசபைக் கூட்டத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர சட்டப்பேரவையில் சபாநயகரை சூழ்ந்து கொண்டு எதிர் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு கூச்சல் குழப்பம் எற்பட்டது. 

அப்போது நடிகரும் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.,வுமான என்டிஆர் பாலகிருஷ்ணனா (ரசிகர்களால் பாலய்யா என்று இவர் அழைக்கப்படுகிறார்) சினிமா பாணியில் மிசையை முறுக்கி தொடையை  தட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்களும் அவருக்குப் போட்டியாக பாயத் தயாரானார்கள்.

அமைச்சர் ராம்பாபு ஆவேசமாக எழுந்து, இதெல்லாம் சினிமாவில் போய் வச்சுக்கங்க.. தைரியம் இருந்தா வாங்க பார்ப்போம் என்று சவால் விட பரபரப்பு கூடியது.

வழக்கமாக சினிமாவில் ஜீப்பையெல்லாம் சுண்டு விரலில் தட்டி விடுவார் பாலய்யா.. அதேபோல வேகமாக ஓடி வரும் ரயிலை ஜஸ்ட் லைக்  சுட்டு விரலைக் காட்டி நிறுத்தி பத்து பக்கம் வசனம் பேசி முடித்த பின்னர் மறுபடியும் அதே சுட்டு விரலால் அதை இயக்கி ஓட வைப்பார்.. சிறைக் கம்பியைப் பெயர்த்தெடுத்து ஹீரோயினைக் காப்பாற்றுவார்.. அந்த ஞாபகத்தில் தொடையைத் தட்டி மீசையை முறுக்கி விட்டார் போலும்.. நல்ல வேளையாக சபாநாயகரைத் தூக்கி வீசி எறிவது, பத்து அமைச்சர்களை அலேக்காக தூக்கி நாலாபக்கமும் சிதறடிப்படது.. மேசை டேபிளையெல்லாம் ப்ப்ப்பூ என்று ஊதித் தள்ளுவது போன்ற காட்சிகளில் அவர் இறங்கவில்லை.. அந்த வகையில் சட்டசபை தப்பியது!