மாணவர்களுக்குப் பரிசளித்துக் கெளரவித்த விஜய்.. டக்குன்னு ஓடி வந்து பாராட்டிய சீமான்!

Su.tha Arivalagan
Jun 28, 2024,05:36 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிளஸ்டூ மற்றும் பத்தாவது வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு இன்று பரிசளித்து விஜய் கெளரவித்தார். இதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.


சென்னையில் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த இந்த கல்வி விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய், போதைப் பொருட்களுக்கு நோ சொல்வோம். தற்காலிக சந்தோஷங்களுக்கு இடம் தர மாட்டோம் என்று மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுத்தார். மேலும் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இங்கு நல்ல தலைவர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது என்றும் விஜய் கூறினார்.




இந்தநிலையில் விஜய்யின் இந்த விழாவுக்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,  கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! 


ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;


‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் சீமான்.


நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் வரும் சட்டசபைத்  தேர்தலில் கூட்டணி அமைக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். விஜய்யும், சமீபத்தில் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றதற்காக சீமானுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சீமான், விஜய் கட்சியின் விழாவைப் பாராட்டியுள்ளார்.