ஹிந்தி கற்க வேண்டும் சொல்லும் அண்ணாமலை.. தமிழ் கற்க வேண்டும் என ஏன் சொல்வதில்லை.. சீமான் கேள்வி!

Manjula Devi
Feb 18, 2025,05:56 PM IST

சென்னை: ஹிந்தி ஏன் கற்க வேண்டும் எதற்காக கற்க வேண்டும் காரணம் சொல்லுங்கள். ஹிந்தி கற்க வேண்டும் என சொல்லும் அண்ணாமலை தமிழ் கற்க வேண்டும் என ஏன் சொல்வதில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.


அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை  ஏன் தடுக்கிறீர்கள்..? தனியார் பள்ளிகளில் பயிலும் திமுகவினரின் குழந்தைகள் மூன்று மொழிகளில் கற்கின்றனர். முதல்வரின் பேரப்பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்.. விஜய்யின் பிள்ளைகள் எங்கு படித்தார்கள் என காணொலி  வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பி பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.


இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,




ஹிந்தி எதற்காக தேவை அண்ணாமலை. நேரடியாகவே கேட்கிறேன். எதற்காக தேவை என கூறுங்கள். ஹிந்தி எதற்காக தேவை எனக்கு ஒரு காரணம் சொல்லுங்கள். தேச ஒற்றுமைக்காகவா..? ஹிந்தி படித்தால் தான் தேசம் ஒற்றுமையாக இருக்கும் என்பதா..? என் மொழியை கொன்று விட்டு, என் தாயை கொன்று விட்டு, உன் அம்மாவை நான் என் அம்மா என்று கூறுவதா.? 


இந்த நாடு நாடாக உருவாவதற்கு முன்பு உருவாகிய மதம்,மொழி அதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு தமிழனாய் இருந்தால் தெரிந்திருக்கும். இந்தி கற்க வேண்டும் என சொல்லும் அண்ணாமலை தமிழ் கற்க வேண்டும் என ஏன் சொல்வதில்லை. கற்றுக்கொள்ள தேவை என்றால் கற்று கொள்ளுவோம்.


ஏன் இந்தி மட்டும் படிக்க வேண்டும். மராட்டி படிக்க கூடாதா. மராட்டியில் இப்படி சொல்வீர்களா? சட்டசபையில் ஹிந்தியில் உறுதிப்பிரமாணம் எடுத்திருக்கிறீர்களா என சொல்ல முடியுமா.  எதுக்கு கற்றுக்கொள்ள வேண்டும் என உறுதியாக சொல்லுங்கள். நான் வேண்டுமென்றால் கற்றுக்கொள்கிறேன். 


உணவு உடை,மொழி இதெல்லாம் அங்கங்கு வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப அதுதான் தீர்மானிக்குமே ஒழிய கட்டாயமாக இதை கற்று கொள்ள  வேண்டும் என கூறும் காரணம் என்ன. என் தாய் மொழியை படிப்பதற்கு நீங்கள் எங்கு பள்ளிக்கூடம் வைத்திருக்கிறாய் அண்ணாமலை. ஹிந்தி படி என்று சொல்லும் நீங்கள் தமிழ் படி என்று சொல்லவில்லையே. எங்களிடம் கேள்வி கேட்கிறீர்களே உங்கள் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள். இங்கு உள்ள  அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் யாராவது ஒருத்தர் கூட அரசு பள்ளிகளில் படிப்பது இல்லையே.


எங்க படித்தால் என்ன நீங்கள் படிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள். அங்கு வந்து படிப்பார்கள். நான் எதுக்கு போராடுகிறேன் தெரியுமா.. என் பிள்ளைகளுக்கு வந்த மாதிரி தமிழ் மொழி எழுதப் படிக்கத் தெரியாமல் மூன்று தலைமுறையினரை திராவிட ஆட்சிகள் உருவாகிவிட்டது. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தான் அதிகாரத்தில் வர நினைக்கிறேன். தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்.


என் நாட்டு மொழி, வேளாண்மை, எந்நாட்டு வரலாறு எதற்கு ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்பதுதான் எனது கேள்வி. தமிழ் பயிற்று மொழி ஆங்கிலம் கட்டாய பாடமொழி. உலகத்தில் எல்லா மொழியும் இருக்கும். அதில் ஹிந்தியும் இருக்கலாம் தெலுங்கு இருக்கலாம், மலையாளம் வரலாம் கன்னடம் வரலாம். அது என் பிள்ளைகள் விரும்ப வேண்டும். ஹிந்தி தெரிந்தால் தான் நீங்கள் இந்த நாட்டில் வாழ முடியும், ஹிந்தி தெரிந்தால் தான் நீங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்று சொல்வதற்கில்லை என பேசினார்.