திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து.. குற்றங்கள் நடக்காத நாட்களே இல்லை..நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

Meenakshi
Feb 20, 2025,03:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில்  திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை நிகழாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு முற்று முழுதாக சீரழிந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்,




 திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வில் மூன்று மாதமாக துப்பு துலங்காத காரணத்தால், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த பழங்குடி மக்களை தமிழ்நாடு காவல்துறை மிரட்டுவது வன்மையாக கண்டனத்திற்குரியது.


தமிழ்நாட்டில்  திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை நிகழாத நாட்களே இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு முற்று முழுதாக சீரழிந்துள்ளது. குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் திறனற்றதாக திணறிவரும் திமுக அரசின் காவல்துறை, குற்றம் நடைபெற்றதற்கு பொய்க்காரணம் கற்பிக்கவும், அப்பாவிகளை குற்றவாளியாக கட்டமைக்கவும் இயல்வது வெட்கக்கேடானது.


திமுக அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்க வேண்டும் என்றால், குற்றங்களை தடுக்கவும், உண்மைக்குற்றவாளிகளை விரைந்து தேடிப் பிடிக்க வேண்டுமே தவிர, குற்றத்தை மூடிமறைக்க முயல்வது காவல்துறையின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது. அப்பாவிகள் மீது கொலை குற்றம் சுமத்தி அவர்களை போலி துப்பாக்கி சூட்டில் சுட்டுக் கொல்வதற்கு பெயர் தான் திராவிட மாடலா?


 ஜெய்பீம்  படம் பார்த்து கலங்கிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது ஆட்சியில் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் மீது பொய் குற்றம் சுமத்தி பழிவாங்கும் கொடுமைகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பி பார்க்கும் திமுக அரசின் சாதனையா? இதுதான் திராவிடம் கட்டிக் காக்கும் சமூக நீதியா? சமத்துவமா?


விளிம்பு நிலை பழங்குடி மக்கள் மீதான இத்தகைய அதிகார வன்முறைகளை திராவிட ஆட்சியாளர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள்? காவல்துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு புனையவும், அவதூறு பரப்பவும் காட்டும் வேகத்தில், அணுவளவு வேகத்தையாவது மக்களை காப்பதற்கும், குற்றங்களை தடுப்பதற்கும் தமிழ்நாடு காவல்துறை காட்டினால் சட்டம் ஒழுங்கு எப்போதே சீரடைந்திருக்கும்.


ஆகவே, திருப்பூர் மாவட்டம், சேமலைக் கவுண்டம்பாளைய மூவர் கொடூர கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழ்நாடு காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும் என எனவும், விசாரணை என்ற பெயரில் பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களை துன்புறுத்தும் கொடும் போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.