தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்று நிரூபித்தவர் அண்ணாமலை.. சீமான் புகழாரம்
செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறது என்று தன்னுடைய செயலாற்றலால் நிகழ்த்தி காட்டியவர் அண்ணாமலை என்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக விழாவில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி எஸ்.ஆர்.எம். தனியார் கல்லூரியில் சொல் தமிழா சொல் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளின் பேச்சு திறனை வளர்க்கும் விதமாக பேச்சு பேட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் இறுதி சுற்று மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த இறுதிச்சுற்று போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறது என்று தன்னுடைய செயலாற்றலால் நிகழ்த்தி காட்டியவர் அண்ணாமலை. தாய்மொழியை தெளிவுற கற்றால், பிற மொழிகளை எளிதாக கற்கலாம்.
பாரதியை விடவா ஒரு பாவலர். எல்லா மொழிகளையும் கற்றவர் பாரதியார். அன்றே சொன்னார் யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதான மொழி எங்கும் காணோம் என்றார். இயேசு பிறந்து 500 ஆண்டுகளுக்கு பின்னர் உருவான மொழி ஆங்கிலம். இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழின் இலக்கண நூல் தொல்காப்பியம் இருக்கிறது. உருவாகவில்லை, இருக்கிறது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் தமிழக மொழியின் பெருமையை பிரதமர் பரப்பி வருகிறார். உலகின் முதன்மை மொழி தமிழ் எங்கள் நாட்டில் இருக்கிறது என பிரதமர் வெளிநாட்டு பயணங்களில் குறிப்பிடுகிறார்.தாய்மொழியை கற்காமல் நீங்கள் எத்தனை மொழிகளை கற்றாளும் அறிவு இல்லாதவர்கள் என்று தெரிவித்துள்ளார்.