கடந்த வாரம் வயநாடு.. இந்த வாரம் இமாச்சல் பிரதேசம்.. புரட்டி எடுக்கும் கனமழை, பெரு வெள்ளம்

Aadmika
Aug 05, 2024,09:07 AM IST

சிம்லா : வயநாட்டில் கடந்த வாரம் பெய்த கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில், தற்போது இமாச்சல பிரதேசத்தையும் புரட்டி எடுக்க துவங்கி உள்ளது கனமழை. இமாச்சலில் தொடர்ந்த பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இமாச்சல பிரதேசத்தின் லாகு சிப்தி மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை கொட்டி தீர்த்தது. இதில் காஜா மாவட்டத்தில் உள்ள சின்சம் கிராமத்தில் வெள்ளப்பெருக்க ஏற்பட்டது. இதில் 5 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இத தொடர்பாக தகவல் அறிந்து அங்கு விரைந்த அதிகாரிகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


லாகுல் சிப்தி கிராமத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த சமயத்தில் மக்கள் அனைவரும் வெளியில் பயணம் செய்வதை தவிர்க்கும் படி போலீசார் உள்ளூர்வாசிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.  மேலும் ஆறுகளில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் அடித்து வரப்படும் நீரால் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.




வானிலையும், சாலைகளின் நிலையும் மோசமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி மக்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம். மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் கேட்டுக் கொண்டள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் இதுவரை பெய்த பேய் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மாண்டி மற்றும் சிம்லா மாவட்டங்களில் நேற்று 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 40 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என சொல்லப்படுகிறது. 


இமாச்சல பிரதேசத்தில் ஜூலை 31ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஜூன் 27ம் முதல் ஆகஸ்ட் 04ம் தேதி வரை பெய்த மழையால் இதுவரை இமாச்சல பிரதேசத்தில் ரூ.662 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இன்னும் என்னவெல்லாம் ஆகுமோ என மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.