பிரபல நரிக்குறவப் பெண் அஸ்வினி..  கொலை முயற்சி வழக்கில் கைது!

Su.tha Arivalagan
Aug 16, 2023,01:27 PM IST
மாமவல்லபுரம்: நரிக்குறவப் பெண் அஸ்வினி மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது அவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகியிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி. அங்குள்ள நரிக்குறவர் குடியிருப்பான பூஞ்சேரியில் வசித்து வருகிறார். இங்கு 60க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றன.  கடந்த 2021ம் ஆண்டு அஸ்வினி உள்ளிட்டோர் கோவில் அன்னதானத்திற்குப் போனபோது அவரை சாப்பிட அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக அஸ்வினி பேசிய வீடியோ அனைவரையும் அதிர வைத்தது.



இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அஸ்வினி உள்ளிட்டோருடன் இணைந்து அன்னதானத்தில் சாப்பிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் அஸ்வினி கொண்டு செல்லப்பட்டார். மாமல்லபுரம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அஸ்வினி வீட்டுக்கும் போய் சந்தித்தார். மேலும் அரசு சார்பில் அஸ்வினிக்கு பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டன. 

ஆனால் சமீப காலமாக அஸ்வினி மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. அவர் சக நரிக்குறவ சமுதாயத்தினரை மிரட்டுவதாகவும், உள்ளூர் வியாபாரிகளுடன் சண்டை போடுவதாகவும், தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறுவதாகவும் தாதா போல நடந்து கொள்வதாகவும் புகார்கள் கிளம்பின. ஆனால் இதை அடியோடு மறுத்து வந்தார் அஸ்வினி. அதேசமயம், அஸ்வினி மீது போலீஸிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் மாமல்லபுரம் போலீஸார் அஸ்வினியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்துள்ளனர். சக நரிக்குறவப் பெண் நதியா என்பவருடன் பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில், நதியாவை அஸ்வினி கத்தியால் குத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் நதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தான் தற்போது அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்வரால் பாராட்டப்பட்டவர், முதல்வரே வீடு தேடி போய் பார்த்து அங்கீகாரம் கொடுத்த ஒரு பெண் கொலை முயற்சி வழக்கில் சிக்கியிருப்பது அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளது.