Deepavali Festival: இந்தியாவில் மட்டுமல்ல.. தாய்லாந்திலும் களைகட்டும் தீபாவளி திருநாள்!
பேங்காக் : இந்தியாவில் மட்டுமல்ல தாய்லாந்திலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கி உள்ளது. அங்கு லோய் கிரதோங் என்ற பெயரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில், உலக நாடுகளில் இந்தியர்கள் இருக்கும் இடங்களில் மட்டும் தான் தீபாவளி கொண்டாடப்படுவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய அண்டை நாடான தாய்லாந்திலும், நம்மை போலவே கோலாகலமாக தீபாவளி கொண்டாடும் வழக்கம் உள்ளது. இதை மிதக்கும் கூடை திருவிழா என்றும் சொல்வதுண்டு. இதுவும் கிட்டதட்ட நம்முடைய தீபாவளி கொண்டாட்டத்தை போல் தான் தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
ஒரு மூங்கில் தட்டில் பூக்கள், விளக்குகள் போன்றவற்றை வைத்து, பாரம்பரிய முறையில் அலங்கரித்து அவற்றை நீர் நிலைகளில் மீதக்க விடுவார்கள். இது இந்தியாவில் கொண்டாடும் தீபாவளியை தான் அனைவருக்கும் நினைவு படுத்தும். ஆனால் நாம் தீபாவளி கொண்டாடும் நாளில் இவர்கள் கொண்டாடுவது கிடையாது. இந்த ஆண்டு லோய் கிரதோங் பண்டிகை நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது.
சுகோதாய் ராஜ்யத்தில் நீர் நிலைகளை வழிபடும் முறை துவங்கப்பட்டது. அன்று துவங்கி, ஆண்டுதோறும் ஐப்பசி வளர்பிறையின் 12வது நாளில் இந்த விழாவை கொண்டாடி வருகிறார்கள். எதிர்மறை விஷயங்களை நீக்கவும், முன்னோர்களை வழிபடவும் இந்த பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது ஆறுகள், ஏரிகள் ஆகியவற்றை வணங்கி, புதிய விஷயங்களை துவங்குவதற்கான நாளாக கருதப்படுகிறது. முன்பெல்லாம் குடும்பம் குடும்பமாக சென்று, பல விதங்களில், பல வடிவங்களில் கூடைகள் செய்து, அவற்றில் பூஜை பொருட்கள், விளக்குகள் வைத்து வழிபடுவார்கள். தற்போது ரெடிமேடாகவே அந்த கூடைகள் கிடைப்பதால் அவற்றை வாங்கி விடுகிறார்கள்.
இவ்த விழாவை காண்பதற்காகவே சுற்றுலா பயணிகள் பலரும் நவம்பர் மாதத்தில் தாய்லாந்தின் பல நகரங்களுக்கு செல்வதை வாடிக்கை வைத்துள்ளார்கள். அலங்கார அணிவகுப்புகள், இசை நிகழ்ச்சிகள் என ஊரே கொண்டாட்டமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துவதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்