அச்சம் வேண்டாம்.. ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது .. எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் துரைமுருகன்

Meenakshi
Feb 22, 2024,07:25 PM IST

சென்னை: மேகதாது திட்டம் தொடர்பாக அதிமுக எழுப்பிய சந்தேகங்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டின் சம்மதம் இல்லாமல் மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட கர்நாடகாவால் வைக்க முடியாது என்று விளக்கம் அளித்தார்.


தமிழக சட்டப்பேரவையில் இன்று கடைசி நாள் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி மேகதாது விவகாரத்தை எழுப்பினார். அப்போது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அவர் பேசுகையில்,  காவிரி மேலாண்மை வாரிய பணிகள் முழுதாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறி இருப்பதற்கு கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 




இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கும்போது கூறுகையில்,  உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் செயல்படுகிறது. மேகதாது அணை திட்டம் சாத்தியமா என்று நீதிமன்றம் தான் கூற வேண்டும். இது குறித்து தமிழக அரசு ஏற்கனவே மத்திய நிர்வாக துறை அமைச்சர், வனத்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியோர் கடிதம் கொடுத்துள்ளனர். இன்னும் யாரிடமும் கர்நாடக அரசு ஒப்புதலை பெறவில்லை. இன்னும் இந்த திட்ட வரைவு நிறைவு பெறவில்லை. 


மத்திய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் அமைச்சகம் காவிரி மேலாண்மை வாரியம் என அனைத்திலும் கர்நாடக அரசு ஒப்புதல் வாங்கினாலும், தமிழக அரசை கேட்காமல் கர்நாடகா அரசால் மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது. தமிழகத்தில் இருக்கும் யாரும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள். எனவே அதற்கு கர்நாடக அரசு பணம் ஒதுக்கி விட்டது. கர்நாடக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அதனை அறிவித்துவிட்டார் என பயப்படத் தேவையில்லை. 


மேகதாது அணை விவகாரத்தில் உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதோ, அதே அக்கறை எங்களுக்கும் இருக்கிறது. காவிரி  மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது என்று முன்னரே வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை விவகாரத்தை பற்றி பேசுவதில்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.


இதனைத் தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு  தீர்மானத்தை சட்டப்பேரவை தலைவர் ஏற்க மறுத்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீர்வளத்துறை அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என்றும் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.