ஆஹா..  வட தமிழ்நாட்டுக்கு மழை வருதாம்ண்ணே.. சென்னைக்கும் "பார்ட்டி" உண்டாம்!

Su.tha Arivalagan
Sep 02, 2023,04:30 PM IST
சென்னை: வட தமிழ்நாட்டில் சூப்பரான மழை பெய்யக் காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

கேரளாவிலும், கேரளாவையொட்டியுள்ள தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளிலும் கன மழை பெ்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. தெற்கு, மேற்கு மற்றும் உட்புற தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்துள்ளது.  இன்று முதல் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் மழை பெய்யத் தொடங்கும்.

அடுத்த 2 வாரங்களுக்கு பருவ மழை நல்ல உச்சத்தில் இருக்கும். நாளையும், நாளை மறுநாளும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், திருப்பதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். குறிப்பாக இரவு நேர மழை சிறப்பாக இருக்கும்.  சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை இருக்கக் கூடும்.

பிற மாவட்டங்களில்  குறிப்பாக மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், சேலம், வால்பாறை ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.