குடைக்கு வேலை வந்துருச்சு.. அக்டோபர் 23 முதல் .. வடகிழக்கு பருவ மழை!

Meenakshi
Oct 14, 2023,11:31 AM IST

சென்னை: வடகிழக்கு பருவ மழை இந்தாண்டு அக்டோபர் 23ம் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத தொடக்கத்திலேயே ஆரம்பாகும். ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை அதிகளவில் பொழிந்ததால் வடகிழக்கு பருவ மழை துவங்க சற்று தாமதமாகியுள்ளது. 




தற்பொழுது தான் தென்மேற்கு பருவ காற்று சற்று வழுவிழந்து வடகிழக்கு காற்று வீச ஆரம்பமாகி இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கேரளா, கர்நாடகா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்த தென் மேற்கு பருவமழை நேற்றுடன் சற்று விலக தொடங்கியுள்ளது.


இந்த நிலையில் அடுத்ததாக வடகிழக்கு பருவமழை  அக்டோபர் 23ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவ மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்த நிலையில் , தற்போது அதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது மக்களை மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது. 


ஏற்கெனவே தென்மேற்கு பருவமழையால் பெருமளவு மழை தமிழகத்திற்கு கிடைத்துவிட்டாலும் அடுத்த ஆண்டு வரும் கோடையை சமாளிக்க இந்த வட கிழக்குப் பருவ மழை சீசன் முக்கியமானதாகும். குறிப்பாக காவிரி டெல்டா பகுதி வறண்டு போய்க் கிடக்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பெரும் இன்னலுக்குள்ளாகியு்ளனர்.


தென்மேற்கு மழை பொழிவு அதிகமாக இருந்ததால், அணைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்பது வேதனைக்குரியது.  வட கிழக்குப் பருவ மழை இயல்பான அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலா பெய்தால் நாம என்ன வேணாம்னா சொல்லப் போறோம்.. நல்லா நனச்சுட்டுப் போகட்டும்.. அடுத்த சீசன் வரை நினைக்கும் அளவுக்கு!