கலக்கும் தெற்கு.. சென்னை, மதுரை, கோவையை விரும்பி நாடி வரும் வட இந்தியப் பெண்கள்!

Su.tha Arivalagan
Mar 10, 2023,09:58 AM IST
சென்னை: வட இந்தியப் பெண்கள் தாங்கள் பணிபுரியவும், வசிக்கவும்  உகந்த நகரங்களாக தென்இந்திய நகரங்களையே குறிப்பாக தமிழ்நாட்டு நகரங்களையே தேர்வு செய்கிறார்களாம்.

டெல்லி உள்ளிட்ட வட இந்திய  நகரங்களை  விட தென்இந்திய நகரங்களே தங்களுக்கு மிகவும் உகந்ததாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

வியூபாயின்ட் 2022 - இந்தியாவில் பெண்களுக்கான முன்னணி நகரங்கள் என்ற பெயரில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில்தான் இது கூறப்பட்டுள்ளது. 




இந்தியாவில் பெண்கள் அதிகம் வசிக்க விரும்பும் டாப் 10 நகரங்களின் பட்டியலில் (10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள்) முதலிடத்தில் சென்னை இருக்கிறது. 2வது இடம் புனேவுக்கு. 3வது இடத்தில் பெங்களூரு, நான்காவது இடத்தில் ஹைதராபாத் உள்ளன. 5வது இடம் மும்பைக்குப் போகிறது. 6வது இடத்தில் அகமதாபாத், அதற்கு அடுத்த இடங்களில் விசாகப்பட்டனம், கொல்கத்தா, கோவை மற்றும் மதுரை ஆகியவை உள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை  என மூன்று நகரங்கள் உள்ளன. கேரளாவில் எந்த நகரமும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து தலா ஒரு நகரம் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில்  தமிழ்நாட்டிலிருந்து 3 நகரங்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

10 லட்சத்திற்கும் உட்பட்ட சிறு நகரங்கள் வரிசையில் முதலிடத்தில் திருச்சி இடம் பெற்றுள்ளது. அடுத்து வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, சிம்லா, மங்களூர், திருவனந்தபுரம், பெலகாவி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதிலும் தமிழ்நாட்டு நகரங்களே அதிகம் இடம் பிடித்துள்ளன.

டாப் 10 பெருநகரங்கள் வரிசையில், தமிழ்நாட்டின் 3 நகரங்கள் இடம் பெற்ற நிலையில் டாப் 10 சிறுநகரங்கள் பட்டியலில் முதல் 5 இடங்களிலும் தமிழ்நாட்டு நகரங்களே இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் விரும்பும் பெருநகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு 14வது இடமே கிடைத்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நகரமாக தலைநகர் டெல்லி விளங்கி வருகிறது. நிர்பயா சம்பவமே அதற்கு முக்கிய உதாரணம். மேலும் அங்கு நிலவும் சுற்றுச்சூழல் மாசு, போக்குவரத்து நெருக்கடி ஆகியவையும் கூட பெண்களின் மனதில் டெல்லிக்கு பெரிய இடம் கிடைக்காமல் போக முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

டாப் 25 பட்டியலில் பெரும்பாலும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷீமீர், ஒடிஷா மாநில நகரங்களே இடம் பெற்றுள்ளன.

இந்த கருத்துக் கணிப்பை அவ்தார் என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் செளந்தர்யா ராஜேஷ் கூறுகையில்,வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தென்னிந்திய நகரங்கள் பெண்களுக்கு ஆதரவானவை   என்பதே  இதற்குக் காரணம் என்றார்.