தத்தளித்துப் போன புதுச்சேரி.. இந்த சீசனிலேயே இன்றுதான் அதிகபட்ச மழை!

Su.tha Arivalagan
Jan 08, 2024,01:54 PM IST

புதுச்சேரி:  புதுச்சேரியில் இன்று கன மழை கொட்டித் தீர்த்து விட்ட நிலையில் இந்த வட கிழக்குப் பருவ மழை சீசனிலேயே இன்றுதான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புதுச்சேரியில் நேற்று முதலே மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கும் விடுமுறை அரிவிக்கப்பட்டது.


வட கிழக்குப் பருவமழைக்காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை புதுச்சேரியில் மழை பெய்துள்ளது.  நேற்று காலை முதல் மிதமான முறையில் பெய்து வந்த மழை, இன்று காலை வேகம் பிடித்தது. தொடர் மழையால் புதுச்சேரி முழுவதும் பல இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போலக் காணப்பட்டது. 




45 அடி சாலை,  செல்லன் நகர், ரெயின்போ நகர், நடேசன் நகர், பாவாணன் நகர், இந்திரா காந்தி சதுக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோல ராஜீவ் காந்தி சதுக்கம், கருவடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.




கன மழை பெய்ததால் காலையில் அலுவலகம் சென்றோர் அவதிக்குள்ளானார்கள். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டார்.


புதுச்சேரியில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த வட கிழக்குப் பருவ மழை சீசனில் ஒரே நாளில் இந்த அளவுக்கு புதுச்சேரியில் மழை பெய்தது இதுவே அதிகபட்சமாகும்.




தற்போது புதுச்சேரியில் மழை சற்று ஓய்ந்துள்ளது. மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் அதை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.