மறுபடியுமா?.. அக்.22 வரை மழை இருக்காம்.. புதுசாவும் ஒன்னு வருது.. வானிலை மையமே சொல்லிடுச்சு!

Aadmika
Oct 17, 2024,05:41 PM IST

டில்லி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அக்டோபர் 22 வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


தென்மேற்கு வங்கடக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, பிறகு வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. 


இதற்கிடையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அக்டோபர் 17ம் தேதி அதிகாலை புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம். தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 16ம் தேதி காலையுடனேயே மழை ஓய்ந்தது. அதற்கு பிறகு ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. இதனால் வானிலை மையம் ரெட் அலர்ட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. 




ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையும் ஆனது. மழையே இல்லாத நிலையில் ரெட் அலர்ட்டா என்று பலரும் விமர்சித்திருந்தனர். வானிலை மைய கணிப்புகள் சரியாக இருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.


அந்தமான் பக்கம் புதிதாக வரும் டிப்ரஷன்


மழை ஓய்ந்தது, இனி மழை பெய்யாது, நிம்மதியாக இருக்கலாம் என சென்னை மக்கள் உள்ளிட்ட பலரும் நிம்மதி அடைந்துள்ள நிலையில் வங்கடக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 20ம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 22ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்ழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் மற்றொரு மழை தென் மாநிலங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து, பல பகுதிகள் மழை நீரில் மூழ்கி உள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் மழையா என மக்கள் அயர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது சீசன்.. இப்படித்தான் அடிக்கடி வரும்.. சமாளித்துதான் ஆக வேண்டும்.. ஸோ, சமாளிப்போம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்