தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்.. நாளை மிக கன மழை பெய்ய வாய்ப்பு

admin
Nov 03, 2023,11:57 AM IST

சென்னை: சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. காலையில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதுடன் குளிர் காற்றும் வீசிவருகிறது.

மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


காலையில் பணிக்கு செல்பவர்கள் , பள்ளி, கல்லூரி செல்பவர்கள் என அவைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒரு நாள் காலையில் மழை பெய்தால் மறுநாள் காலையில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்கள் குழப்பமடைந்திருந்தனர்.




இந்த நிலையில் இன்றுதான் ஒரு அருமையான மழைப்பொழிவை சென்னை சந்தித்தது. சென்னை நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை,  கிண்டி, அண்ணா சாலை, எழும்பூர், சென்ட்ரல், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், தாம்பரம், டி.நகர், கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக சாரல் மழையுடன் குளிர் காற்றும் வீசிவருகிறது. 


தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்து விட்டது.  இந்த மழை பொழிவால் சென்னை நகரமே ஏசி போட்டது போல ஜில்லாகி, ஏதோ ஊட்டி,கொடைக்கானல் போல மாறியுள்ளது.


ஆரஞ்ச் அலர்ட்


இதற்கிடையே, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மாஹே, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மிக மற்றும் மிக மிக கன மழை பெய்யும் வாய்ப்பு இருந்தால்தான் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


நாளையும் சென்னை நகரில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையத் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல், கடலோர தமிழ்நாட்டில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.