நெருங்குது புரட்டாசி.. மீன், கறிக் கடைகளில் முண்டியடித்த மக்கள் கூட்டம்!

Su.tha Arivalagan
Sep 10, 2023,11:25 AM IST
சென்னை: புரட்டாசி மாதம் நெருங்கி வருவதால் அசைவ உணவு உண்போர் கறிக் கடைகள், மீன் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

அசைவ உணவு உண்போரில் பெரும்பாலானாவர்கள் பூஜை புணஸ்காரங்கள், மத நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள்,விரதங்கள்  போன்றவற்றிலும் தீவிர கவனம் செலுத்துபவர்கள்தான். எனவே முக்கிய நாட்களில் அவர்கள் அசைவத்தை தவிர்ப்பது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானவர்கள் சுத்த சைவர்களாக மாறி விடுவது வழக்கமானதுதான்.



அந்த புரட்டாசி மாதம் செப்டம்பர் 18ம் தேதி தொடங்குகிறது. இதனால் அசைவப் பிரியர்கள், அடுத்த ஒரு மாதத்துக்கு அசைவம் சாப்பிட முடியாதே.. இப்பவே முடிந்தவரை கட்டு கட்டு என்று கட்டி விடலாம் என்று அசைவக் கடைகளில் அலை மோதுகின்றனர்.

தமிழ்நாடு முழுக்க மட்டன், சிக்கன் வாங்கவும், மீன் வாங்கவும் இன்று கூட்டம் கடுமையாக அலை மோதியது. வழக்கமாக சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும். இன்று வழக்கத்தை விட அதிகமாகவே கூட்டம் காணப்பட்டது. விலையும் கூட சற்று உயர்ந்தே காணப்பட்டது. மதுரையிலும் கூட கரிமேடு மீன் மார்க்கெட்டில் கூட்டம் ஜே ஜே என்று அலை மோதியதைக் காண முடிந்தது.



மட்டன், சிக்கன் விலை அதிகமாக இருப்பதால் பலரும் மீன் பக்கம் தாவி விடுவது அவ்வப்போது நடப்பதுதான். அந்த வகையில் இன்றும் கூட மீன் கடைகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.  அடுத்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட வழியில்லை. காரணம், அடுத்த நாள் புரட்டாசி பிறப்பதாலும், விநாயகர் சதுர்த்தி வருவதாலும் பெரும்பாலானவர்கள் தவிர்ப்பார்கள். எனவேதான் இன்றே கூட்டம் அலை மோதுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.