பெருங்களத்தூர் சாலையில் முதலை.. "பயப்படத் தேவையில்லை".. அதிகாரி விளக்கம்

Su.tha Arivalagan
Dec 04, 2023,10:04 AM IST

சென்னை: தாம்பரம் அருகே பெருங்களத்தூர் பகுதியில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் சாலையில் நேற்று இரவு முதலை ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து வனத்துறை அதிகாரி சுப்ரியா சாஹு விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்களுக்கு இந்த வகை முதலைகள் தீங்கு விளைவிக்காது. ஏரிகள் நிரம்பி வழிவதால் இந்த முதலை வெளியே வந்திருக்கிறது. மீண்டும் அது தனது நீர் நிலைக்கே போயிருக்கும் என்று அவர் விளக்கியுள்ளார்.


சென்னையிலும், புறநகர்களிலும் மழை விட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறது. இதேபோல ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் மழை விடாமல் பெய்து வருகிறது. 


இந்த நிலையில் நேற்று இரவு பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் ஒரு பெரிய முதலை சாலையில் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் புறநகர்ப் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு விளக்கியுள்ளார்.




இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்வீட்:


எல்லோரும் இந்த முதலை வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் இதுபோன்ற முதலைகள் சில உள்ளன. இவை மிகவும் கூச்ச சுபாவம் உடையவை. குறிப்பாக மனிதர்களைக் கண்டால் விலகிப் போய் விடும்.  இந்த முதலை, தொடர் மழை காரணமாக நீர் நிலை நிரம்பி வழிவதால் வெளியில் வந்திருக்கும்.


தயவு செய்து யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். இந்த முதலைகள் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனப் பிரிவு உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் சுப்ரியா சாஹு.


பொதுமக்கள் கன மழை நிற்கும் வரை நீர்நிலைகள் பக்கம் போவது, செல்பி எடுப்பது, நீச்சல் அடிப்பது போன்ற தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அரசுக்கும், அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகளை விட்டு முடிந்தவரை வெளியே வராமல் இருப்புத மிக மிக நல்லது.