"அம்மா" மினி கிளினிக் முடிஞ்சு போச்சு.. இனி வராது.. மா.சுப்பிரமணியன்

Meenakshi
Nov 12, 2023,09:05 AM IST

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டு திட்டம். அது முடிந்து விட்டது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் அம்மா மினி கிளினிக். பெரிய அளவில் மருத்துவமனைகள் இல்லாத இடங்களில் இந்த கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது.




இந்த நிலையில் தற்போது அந்த திட்டம் முடிவடைந்து விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 


புதுக்கோட்டை பல் மருத்துவக்கல்லூரியை வருகிற 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.  தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு மட்டுமே தற்போது இருக்கிறது.  தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சனிக்கிழமைகளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இதையெல்லாம் மத்திய அரசு அறிவிப்பிற்கு  முன்பே தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டது. 


அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டுக்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது. அது முடிந்து விட்டதால் அதை மீண்டும் தொடர முடியாது. அதேசமயம், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் என்பது 5 ஆண்டுக்கான திட்டம். இந்த திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவு பெற்றாலும், அதனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. அதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.