காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க மாட்டோம்.. இஸ்ரேல் பிடிவாதம்

Su.tha Arivalagan
Oct 12, 2023,05:09 PM IST

ஜெருசலேம்: காஸா பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் அனுமதிக்க மாட்டோம். மனிதாபிமான உதவிகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் மின்சாரத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளது பாலஸ்தீன மக்கள் குறித்த கவலையை அதிகரிப்பதாக உள்ளது.


இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் சிக்கி காஸா பகுதி சின்னாபின்னமாகியுள்ளது. அந்த நகரின் அடிப்படைக் கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைத்து வருகிறது இஸ்ரேல். அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பல லட்சம் பேர் இடம் பெயரந்து சென்று விட்டனர். ஹமாஸ் போராளிகளை வேட்டையாடுவதாக கூறி காஸாவையே நிர்மூலமாக்கி வருகிரது இஸ்ரேல்.




இஸ்ரேல் படையினர் காஸா முனைப் பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை துண்டித்துள்ளனர். காஸா நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களுக்கு மனிதாபிமா உதவிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இதை இஸ்ரேல் அமைச்சர் கட்ஸ் நிராகரித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில்,  காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளா..? நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை முதலில் அவர்கள் விடுவிக்க வேண்டும். அதுவரை தண்ணீர் கிடையாது, கரண்ட் கிடையாது, எரிபொருள் கிடையாது.. எதுவுமே கிடையாது என்றார் அவர்.


இஸ்ரேல் மீது அதிரடியான ராக்கெட் வீச்சை மேற்கொண்ட சமயத்தில், ஹமாஸ் போராளிகள் நூற்றுக்கணக்கில் இஸ்ரேலுக்குள் புகுந்து 150க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்று விட்டனர். இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் அவர்களைக் கொல்வோம் என்றும் ஹமாஸ் மிரட்டியுள்ளது .


இந்த நிலையில்தான் தற்போது காஸாவை குண்டு வீசி அழித்து வரும் இஸ்ரேல் படையினர் அடுத்து தரை மார்க்கமாக உள்ளே புகுந்து ஹமாஸ் போராளிகளை வேட்டையாடத் திட்டமிட்டுள்ளனர்.


இஸ்ரேலின் இந்த இரும்புப் பிடி நடவடிக்கையால் காஸாவில் மேலும் பல ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.