இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.. காரணம் இது தானா?

Aadmika
Jan 31, 2024,02:31 PM IST

டில்லி : பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01ம் தேதியான நாளை தாக்கல் செய்ய உள்ளார். இது ஆளும் பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 


வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய தினம் மத்திய நிதியமைச்சர், பார்லிமென்ட்டில் நாட்டின் நிதி நிலைமை எப்படி உள்ளது, கடந்த ஓராண்டில் செய்யப்பட்ட வரவு-செலவு ஆகியவற்றை விளக்கும் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வார். இதற்கு பொருளாதார ஆய்வறிக்கை என்று பெயர். இந்த அறிக்கையை பொருளாதார தலைமை ஆலோசகர் தயாரிப்பார். இதனை மத்திய அமைச்சர் ஜனவரி 31ம் தேதியன்று லோக்சபாவில் தாக்கல் செய்வது தான் வழக்கமான நடைமுறை. ஆனால் இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 




லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடைபெற போகும் சமயத்தில் நாட்டின் நிதி நிலைமை குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிடாமல் இருப்பதால் தேர்தலுக்கு பிறகு புதிதாக பதவியேற்கும் புதிய அரசிற்கு இது மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தும். ஜனவரி 29ம் தேதி பொருளாதார தலைமை ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் இந்திய பொருளாதார குறிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால் இது பொருளாதார ஆய்வறிக்கைக்கு மாற்றாக வெளியிடப்பட்டது என அவர் தெரிவிக்கவில்லை. அதே சமயம் தேர்தல் ஆண்டு என்பதால் நிதிநிலைமை குறித்த விபரங்கள் அடங்கிய குறிப்பு என்பதால் இது முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. 


Indian economy- a review என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையாக இருந்தாலும் இதில் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், வரும் ஆண்டுகளுக்கான எதிர்பார்ப்புகள் ஆகியவை அடங்கியதாக இருந்தது. இந்த Indian economy- a review ல் அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்றும், 2030ம் ஆண்டிற்குள் 7 ட்ரில்லியன் டாலர் என்ற அளவை இந்திய பொருளாதாரம் எட்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


2024-2025 ம் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதத்தை நெருங்கும்  என்றும், 2030ம் ஆண்டில் 7 சதவீதத்தை கடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார நிலை 1950 முதல் 2014 வரை எப்படி இருந்தது, 2014 முதல் 2024 வரை எப்படி இருந்தது என இரண்டு பகுதிகளாக பிரித்து விளக்கப்பட்டிருந்தது. அதாவது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை, பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ற அடிப்படையில் இவை குறிப்பிடப்பட்டிருந்தது. 


64 பக்கங்கள் கொண்ட இந்த Indian economy- a review ல் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றங்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.