Cow hug day: "பசுவை அணைக்காதீங்க".. அறிவிப்பை திரும்பப் பெற்றது விலங்குகள் நல வாரியம்!

Su.tha Arivalagan
Feb 10, 2023,09:16 PM IST

டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கடைப்பிடிக்குமாறு விடுத்த அழைப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து அதை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிகிறது.


பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தடபுடலாக தயாராகி வருகிறார்கள். தற்போது காதலர் தின வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தினத்தைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.


இந்த நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், பிப்ரவரி 14ம் தேதி பசுக்களை கட்டி அணைக்கும் தினமாக கொண்டாடுமாறு அதில் அறிவுறுத்தியிருந்தது.  இப்படி அணைப்பதன் மூலம் உணர்வுகள் அதிகரிக்கும், தனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்தமாகவும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்றும் அது கூறியிருந்தது.


இது பெரும் சலசலப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது. பசுக்களை கட்டி அணைப்பது தொடர்பாக பலர் கேலி செய்து வந்தனர். கிண்டல் மீம்ஸ்களும் கொடி கட்டிப் பறந்தன. பசுக்களைப் போலவே காளைகளை கட்டி அணைக்கவும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து பீட்டாவுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பின.


இந்தச் சூழ்நிலையில் தற்போது இந்த அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.  இதுகுறித்த அறிவிப்பை வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா வெளியிட்டுள்ளார். இவர்தான் பசுக்களை கட்டி அணைக்கும் தினமாக கொண்டாடுமாறு அறிவிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.