முதல்வர் கனவு இல்லை.. கட்சியை வளர்ப்பது தான் என் வேலை.. அண்ணாமலை பளிச் பதில்

Meenakshi
Jan 19, 2024,07:06 PM IST

கோயம்பத்தூர்: எனக்கு முதல்வர் கனவு இல்லை. பெரிய தலைவர்களுடன் சேர்த்து கட்சியை வளர்ப்பது தான் என் வேலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சிற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.


சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட டி.ஜெயக்குமார் அண்ணாமலை முதலமைச்சர் ஆவது என்பது இலவு காத்த கிளி போலத்தான். அது நடக்காத விஷயம் என்று கூறியிருந்தார்.


டி ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக பாஜகவை பொறுத்தவரை என்னை காட்டிலும் முதலமைச்சர் நாற்காலிக்கு பத்து முதல் 15 பேர் பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள். அ தி.மு.க.வில்  இவரை தவிர வேறு யாராவது ஒருவர் முதல்வர் நாற்காலிக்கு பொருத்தமானவர் என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். பா.ஜ.க. வில்  சிங்கிள் லீடர் கிடையாது. என்னைப் போலவே பல தலைவர்கள் இருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளுக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பாஜகவில் மட்டும் தான் நிறைய தலைவர் இருக்கிறார்கள்.




மற்ற கட்சிகளில் எல்லாம் ஒருவரை மட்டுமே உட்கார வைத்துவிட்டு மற்றவர்கள் எல்லாம் அவரை சுற்றி சுற்றி வருகிறார்கள். பதவி ஆசை இருப்பவர்கள் பாஜகவை பார்த்து குற்றம் சாட்ட எந்த தகுதியும் இல்லாதவர்கள். தங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் கொள்கைக்காகவும், மாற்றத்திற்காகவும் தான் இருக்கிறார்கள் தவிர வேறு எதற்காகவும் இல்லை. எனது வேலை எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க வேண்டும். ஆல்ரெடி கட்சியில் இருக்கும் பெரிய தலைவர்களுடன் சேர்ந்து பாஜகவை வளர்ப்பது தான் அண்ணாமலையின் வேலை என்று கூறியுள்ளார்.