விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. எந்த விரலில் மை வைப்பாங்க தெரியுமா?.. தெரிஞ்சுக்கங்க!

Meenakshi
Jul 02, 2024,07:59 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில்தான் மை வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை அந்த விரலில் லோக்சபா தேர்தலின்போது வைத்த மை அழியாமல் இருந்தால், அதற்கு மாற்றாக இடது கை நடு விரலில் மை வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் தெரிவித்துள்ளது.


2024ம் ஆண்டிற்கான மக்களவைதேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த ஜூன் 4ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு  அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலின் போது வாக்களித்த வாக்காளர்களின் இடது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. அந்த மை இன்னும் பலர் கையில் அழியாமல் இருப்பதாகவும், இடைத்தேர்தலின்  போது மை எப்படி வைக்கப்படும் என்ற சந்தேகமும் எழுந்தது.




வரும் ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ம் தேதி  தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெற்றது.இந்த மனுக்களை திரும்ப பெற வரும் 26ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. 


இந்நிலையில், வரும் 10ம் தேதி விக்கிவாண்டி தொகுதியில் நடைபெறும் தேர்தலின் போது மை வைக்கப்படுமா? எந்த விரலில் மை வைக்கப்படும் என்ற சந்தேகம் பொது மக்களிடையே எழுந்தது. இந்த சந்தேகம் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், " விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை. இடது கை ஆள்காட்டி விரலில் மை இருந்தால் அதற்கு மாற்றாக இடது கை நடு விரலில் மை வைக்கப்படும்" என தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.