பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை இல்லை.. பிரேமலதா விஜயகாந்த் திடீர் அறிவிப்பு

Meenakshi
Mar 12, 2024,04:16 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை எல்லாம் நடக்கவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்து, வேட்பாளர்களையும் அறிவிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஒரு மாதமாகவே நாடாளுமன்றம் தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.




தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான அதிமுக கூட்டணியில் இதுவரை புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை இணைந்துள்ளன. திமுக தரப்பு இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. பாஜகவிலும் கூட சில பல நிகழ்வுகள் அதிரடியாக நடந்து வருகின்றன. அதிமுக தரப்புதான் அமைதியாக இருக்கிறது.


பாமக, தேமுதிக எங்கு போகும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில்  தேமுதிக அதிமுகவுடன் சேருமா? அல்லது பாஜகவுடன் சேருமா என்று தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


பிரேமலதா விஜயகாந்த்தின் இந்த முடிவால் தேமுதிக நிர்வாகிகள் நிம்மதி அடைந்துள்ளனர் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், அதிமுக தரப்பிலும் கூட எதுவும் இதுவரை இறுதி செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. பிரேமலதா விஜயகாந்த் தினசரி விஜயகாந்த் நினைவிடத்திலேயே இருக்கிறார். அங்கு நடந்து வரும் அன்னதானம் உள்ளிட்டவற்றைப் பார்த்துக் கொள்கிறார். இடையில் மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்ற ஒன்றையும் இங்கு தேமுதிகவினர் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.