ஏலேலோ ஐலசா... எங்க இருக்கு கைலாசா?.. அறிவிக்க போகிறார் நித்தியானந்தா.. மக்களே ரெடியாகுங்க!

Su.tha Arivalagan
Jul 05, 2024,10:26 PM IST

சென்னை :   கைலாசாவில் குடியேற முன்பதிவு செய்யுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள சாமியார் நித்தியானந்தா, நீண்ட காலமாக அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும் (கிட்டத்தட்ட வலை வீசி தேடிக் கொண்டிருக்கும்), தனது கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலை வெளியிட போவதாகவும் அறிவித்துள்ளார். 


சாமியார் நித்தியானந்தாவை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆன்மீக குருவாக உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான ஆதரவாளர்களை தனக்கென வைத்துள்ள நித்தியானந்தா, பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு பரமஹம்ச நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமத்தை ஏற்படுத்தினார். இந்த பீடத்திற்கு கனடா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. பல சர்ச்சை, விமர்சனம், ரகசிய கேமரா, அறைக்குள் கசமுசா, பாலியல் வழக்கு, தலைமறைவு, கைது, ஆண்மைச் சோதனை என சகட்டுமேனிக்கு அவர் சிக்கிய போதும் நித்தியானந்தாவை ஆன்மிக குருவாக போற்றுபவர்கள் உலகம் முழுவதும் தற்போது வரை இருக்கிறார்கள்.. இதற்கு முக்கியக் காரணம் அவரது வாய்தான்.. அதாவது பேச்சுத் திறமைதான்.




பல்வேறு வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தா, கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமறைவான நித்தியானந்தா, சில ஆண்டுகளுக்கு முன் கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கி உள்ளதாகவும். இந்த தீவில் தான் வசித்து வருவதாகவும் கூறி இருந்தார். ஆனால் இந்த கைலாசா எங்கு இருக்கிறது என யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த கைலாசா குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது செய்தி அடிபட்டுக் கொண்டேதான் இருக்கிறது.


அந்த நாட்டுப் பிரதிநிதியைச் சந்தித்தோம், இந்த நாட்டு பிரதிநிதியுடன் ஒப்பந்தம் போட்டோம். ஐநா. கூட்டத்தில் கலந்து கொண்டோம் என்று புகைப்படங்களுடன் தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பியடிபடிதான் இருக்கிறது டீம் நித்தியானந்தா. ஆனால் தற்போது வரை நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியாது. இருந்தாலும் அவ்வப்போது வீடியோ, ஆடியோக்களை வெளியிட்டு தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஆன்மிக போதனைகள் வழங்கி வருகிறார் நித்தியானந்தா.


இந்நிலையில் நித்தியானந்தாவின் எக்ஸ் தள பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 21 ஆம் தேதி, குருபூர்ணிமா நன்னாளில் கைலாஸா இருக்கும் இடம்  அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கின்றோம் கைலாஸவாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள்  : https://ecitizen.info/kailasavasis" என இணையதள முகவரியுடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சீமானே போக விரும்பும் கைலாசா!




கைலாசா எங்கு இருக்கிறது என்று தெரியா விட்டாலும், நித்தியானந்தா வசிக்கும் கைலாசாவிற்கு செல்ல பலரும் ஏற்கனவே ஆர்வம் காட்டி வந்தனர். ஏன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூட சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது பேசாம நான் கைலாசா நாட்டுக்குப் போய்ர வேண்டியதுதான் என்று காமெடியா கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


இந்நிலையில் தற்போது நித்தியானந்தாவே முன்பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளதும், கைலாசா எங்கிருக்கிறது என அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளதால் கைலாசா எங்கிருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலரிடமும் அதிகரித்துள்ளது. நித்தியானந்தாவின் இந்த பதிவிற்கு பலரும், தலைவா...என்னை எப்படியாவது கூட்டிட்டு போயிடு  தலைவா.. ஏலேலோ ஐலசா.. நம்ம நாடு கைலாசான்னு நாங்களும் ஜாலியா இருப்போம்ல என கலாய்த்துக் கமெணட்ஸ் போட்டு வருகின்றனர்.