எங்க கிட்ட வாங்க.. "இ சிட்டிசன் ஆகுங்க".. நித்தியானந்தா பலே அழைப்பு!

Su.tha Arivalagan
Mar 02, 2023,11:10 AM IST
சென்னை: தலைமறைவு சாமியார் நித்தியானந்தாவின் அடுத்தடுத்த அதிரடிகளால் சமூக வலைதளம் ஒரே சூடாக காணப்படுகிறது.



தமிழ்நாட்டைச் சேர்ந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. இவர் மீது கர்நாடக கோர்ட்டில் பல்வேற வழக்குகள் உள்ளன. இவர் தலைமறைவாகி விட்டார். இவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் திடீரென கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார் நித்தியானந்தா. அது முதல் சமூக வலைதளத்தில் ஏதாவது ஒன்றைப் போட்டுக் கொண்டே இருக்கிறார் நித்தியானந்தா. அவர் கரெக்டாக எங்கிருக்கிறார் என்பது மட்டும் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.


ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... முதல் சுற்றில் சுயேட்சையிடம் வீழ்ந்த தேமுதிக


இந்த நிலையில் சமீப காலமாக அவர் போட்டு வரும் பதிவுகள் பல்வேறு ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் கிளப்புவதாக உள்ளது. அமெரிக்காவின் நெவார்க் நகருடன் ஒப்பந்தம், யாருக்குமே தெரியாத  நாடுகளுடன்  தூதரக உறவு  என்று அதிரடிகாட்டி வந்தார் நித்தியானந்தா. இதற்கு உச்சமாக, ஜெனீவாவில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் தனது கைலாசா நாட்டுப் பிரதிநிதியும் கலந்து கொண்டதாக டீம் நித்தியானந்தா போட்ட பதிவுதான் ஹைலைட்டாக அமைந்தது.

சாமியார் பெண்மணி ஒருவர் அந்தக் கூட்டத்தில் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் இந்தியாவைக் குறை கூறி பேசினார் அந்த அம்மணி. இந்த நிலையில் தற்போது இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது நித்தியானந்தா டீம்.

யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசாவில் இ குடியுரிமை பெற விண்ணப்பியுங்கள், விண்ணப்பம் இலவசம் என்று கூறி  ஒருகார்டு போட்டுள்ளனர். அதில் க்யூ ஆர் கோடு எல்லாம் உள்ளது. நித்தியானந்தாவின் புகைப்படத்துடன் கூடிய அந்த கார்டில், உங்களுடைய இ குடியுரிமையை இன்றே பெறுங்கள்.. முற்றிலும் இலவசம் என்று போட்டுள்ளனர். பக்கத்திலேயே தாடி மீசை இல்லாமல் மைக் சகிதம் சிரித்தபடி காட்சி தருகிறார் நித்தியானந்தா.

கைலாசாவை உலகுக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த இ குடியுரிமை என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது. விட்டால் இந்தியாவுக்கே தூதரை அனுப்பி கலாய்ப்பார்கள் போல இந்த கைலாசாக்காரர்கள்.. பார்ப்போம் எவ்வளவு தூரம் போகுதுன்னு!