ஒரே படம்... ஒரே வாரத்தில் 2 விருது... தட்டித் தூக்கிய தாய்க்கிழவி... அசத்திய நித்யா மேனன்

Aadmika
Aug 16, 2024,07:30 PM IST

சென்னை : நடிகை நித்யா மேனனுக்கு திருச்சிற்றம்பலம் படத்திற்காக ஒரே வாரத்தில் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ் படம் ஒன்றிற்காக அவருக்கு கிடைத்துள்ள தேசிய விருது அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


மலையாள நடிகையான நித்யா மேனன், குழந்தை நட்சத்திரமாக பிரெஞ்சு ஆங்கில படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரம், பின்னணி பாடகியாக மட்டுமே இருந்த நித்யா மேனனுக்கு கன்னடத்தில் தான் ஹீரோயினாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. செவன் ஓ கிளாக் என்ற படம் தான் இவர் ஹீரோயினாக நடித்த முதல் படம். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தெலுங்கில், ஆலே மொதலைந்தி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்காக இவர் ஆந்திர மாநில அரசின் நந்தி விருது பெற்றார். இந்த படம் தென்னிந்திய சினிமாவையே நித்யா மேனன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.




பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இருந்தும் வாய்ப்புகள் வந்த குவிய துவங்கியது. தமிழில், ஓ காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான சைமா விருதினை வென்றார். அதற்கு பிறகு ஃபிலிம்ஃபேர், நந்தி என பல விருதுகளை பெற்று, பேசப்படும் நடிகையானார். மலையாளத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தாலும் மற்ற மொழிகளிலும் கிடைக்கும் சிறிய ரோலை கூட விட்டு வைக்காமல் பட்டையை கிளப்பி வருகிறார். 


தமிழில் மெர்சல் படத்தில் தளபதி விஜய்யுடன் கலக்கியிருந்தார். காஞ்சனா 2 படத்தில் இவர் நடித்த வேடம் இவரை திறமையான பெர்பார்மராக அடையாளம் காட்டியது. நடித்தது குட்டி ரோலாக இருந்தாலும் அழுத்தமாக ரசிகர்களின் மனதில் பதிந்தார்.  அதன் பின்னர் வந்ததுதான் திருச்சிற்றம்பலம்.




தனுசுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நல்ல தோழி ரோலில் நடித்திருந்தார். இந்த படம் செம வரவேற்பை பெற்றதுடன், மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் நித்யா மேனனுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. ஷோபனா போல தனக்கும் ஒரு பெண் தோழி கிடைக்க மாட்டாளா என இளைஞர்கள் ஏங்கும் அளவிற்கு அருமையான, யதார்த்தமான நடிப்பை காட்டி இருந்தார். இந்த படத்தில் பாடலுக்காக எழுதிய தாய் கிழவி என்ற வார்த்தை, கடைசியில் ரசிகர்கள் நித்யா மேனனுக்கு வைத்த செல்ல பெயராகவும் மாறி விட்டது.  இப்படம் நித்யா மேனனின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய உச்சம் என்றும் சொல்லலாம்.


சமீபத்தில் தான் திருச்சிற்றம்பலம் படத்திற்காக ஃபிலிம்பேர் விருது சிறந்த நடிகை விருது நித்யா மேனனுக்கும், சிறந்த நடிகருக்கான விருது தனுஷிற்கும் அறிவிக்கப்பட்டது. இதற்காக தனுஷ், நித்யா மேனனுக்கு வாழ்த்து சொல்லி எக்ஸ் தளத்தில் போஸ்ட் போட்டிருந்தார். அவர் வாய் முகூர்த்தமோ என்னவோ, வாழ்த்து சொன்ன சில நாட்களிலேயே அதே திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் நித்யா மேனனுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 




இது நித்யா மேனனுக்குக் கிடைத்துள்ள முதல் தேசிய விருது ஆகும். ஒரே படத்திற்காக நடிகை ஒருவர் அடுத்தடுத்து சிறந்த நடிகை விருது பெறுவது சினிமாவில் மிக அபூர்வம். 


தென்னிந்திய மொழிகள் பலவற்றில், பல படங்களில் நித்யா மேனன் நடித்திருந்தாலும், ஏகப்பட்ட விருதுகளைப் பல மொழிகளிலும் வென்றிருந்தாலும், தேசிய அளவில் தமிழ் படம் ஒன்றிற்காக அவருக்கு முதல் தேசிய விருது கிடைத்துள்ளது அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த விருது நித்யா மேனனுக்கு தமிழில் இன்னும் பட வாய்ப்புக்களை அதிகப்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்