"நினைவெல்லாம் நீயடா".. பிரசவத்திற்கு.. 3 நாட்கள் முன்பு வரை.. உணர்ச்சியில் நெகிழ்ந்து போன மதுமிதா!

Manjula Devi
Feb 07, 2024,04:46 PM IST

சென்னை: நினைவெல்லாம் நீயடா படம் என் வாழ்நாள் முழுவதும் என் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு முக்கிய காரணம் என் பிரசவத்திற்கு மூன்று நாட்கள் முன்பு வரை இப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து வந்தேன் என  நகைச்சுவை நடிகை மதுமிதா உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.


திரையுலகில் சிறந்த காமெடி நடிகையாக திகழ்பவர் மதுமிதா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி தொடரில் நடித்து அசத்தியுள்ளார். பின்னர் வெள்ளித் திரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்திற்கு இணையான காமெடி நடிகையாக வலம் வந்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா. தற்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.




இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் நினைவெல்லாம் நீயடா. இப்படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. நினைவெல்லாம் நீயடா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கியுள்ளார் இயக்குனர் ஆதி ராஜன் .இவர் ஏற்கனவே சிலந்தி, ரணதந்திரா, அருவா, சண்ட, போன்ற படங்களை இயக்கியவர்.


இப்படத்தில் பிரஜின் நாயகனாகவும், மனிஷா யாதவ் நாயகியாகவும்  நடித்துள்ளனர். அப்பா படத்தில் நடித்த யுவலட்சுமி இளம் நாயகியாகவும், சினாமிகா மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார்கள். இளம் நாயகனாக ரோஹித் மற்றும் மனோபாலா, மதுமிதா, இயக்குனர் ஆர்.வி உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார், ஆகியோர் நடித்துள்ளனர்.


இப்படம் 70 சதவீதம் உண்மைக் கதையை வைத்தும், 30 சதவீதம் கற்பனைக் கலந்து உருவாகியுள்ளதாம். எல்லோரும் பள்ளிப் பருவத்தை தாடி தாண்டி  வந்திருப்போம்.அப்போது யாராலும் மறக்க முடியாத ஒரு நினைவு காதல். அதனை வைத்து இப்படத்தை உருவாக்கிய உள்ளாராம் இயக்குனர் ஆதிராஜன்.


இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாந்த் லேபில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இப்படத்தின் நடிகைகள் பேசியதாவது:


நடிகை கோமல் ஷர்மா




உலகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் எதையும் தொட முடியாது, கண்ணால் பார்க்க முடியாது என அமெரிக்காவைச் சேர்ந்த ஹெலன் கெல்லர் என்பவர் கூறியுள்ளார். இசையும் காதலும் அதுபோலத்தான். இசைஞானியின் இசையும் காதலும் என இரண்டு அற்புதமான விஷயங்கள் இப்படத்தில் இருக்கின்றன. இப்போது காதல் படங்கள் அதிகம் வருவதில்லை. அந்தக் குறையை இப்படம் போக்கும்  என்று கூறினார்.


இரண்டாம் நாயகி சினாமிகா




இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் ஒரு கனவாக இருக்கும். என்னுடைய ஆசையும் இந்த படத்தில் தான் நிறைவேறி இருக்கிறது. அவருடைய இசைமேல் எனக்கு அவ்வளவு காதல் இருக்கிறது. அவரது பாடல்களைக் கேட்டுத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். என்னுடைய முதல் படமே இசைஞானி இசையில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஆதிராஜனுக்கு நன்றி என கூறினார்.


இளம் நாயகி யுவலட்சுமி 




நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இசைஞானியின் இசையில் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அதை பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன். பள்ளிக் காதல் என்பது மறக்க முடியாத ஒரு விஷயம் தான். எல்லாருமே அதைக் கடந்து வந்திருப்போம். இதை மையப்படுத்தி ஆதிராஜன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். அதில் நானும் ஒரு பாகமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.


நடிகை மதுமிதா




நினைவெல்லாம் நீயடா படம் வாழ்நாள் நாள் முழுவதும் என் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. என்னுடைய பிரசவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை கூட இதன் படப்பிடிப்பில் நடித்து வந்தேன். இயக்குநர் ஆக்சன் என்று மைக்கில் சொல்லும்போது அந்த அதிர்வை கேட்டு என் வயிற்றில் உள்ள குழந்தை என்னை எட்டி உதைப்பான். அதை மறக்கவே முடியாது. 


பத்திரிகையாளரும் நடிகருமான கயல் தேவராஜ் என்னோடு நடிக்கும்போது, எத்தனையோ டெடிக்கேசனான நடிகைகளைப் பார்த்திருக்கேன். ஆனா மூணு நாள்ல டெலிவரியை வச்சிக்கிட்டு நடிக்கிற ஒரு நடிகையை இப்போதான் பார்க்கிறேன் எனப் பாராட்டினார். எனக்குக் கிடைத்த முக்கியமான வாழ்த்தாக அதைப் பார்க்கிறேன்.


ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு படம் உருவாகி வெளியாகும் வரை ஒரு பேறுகாலம் போலத்தான்.  பெண்களுக்கு உள்ள அத்தனை அவஸ்தைகளும் அவர்களுக்கும் உண்டு. அந்த வகையில் இயக்குநர் ஆதிராஜனுக்கு நல்ல வெற்றியைத் தரக்கூடிய ஒரு குழந்தையாக இப்படம் இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.