Maestro இசையில்.. என்ன மேஜிக் காத்திருக்கோ.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "நினைவெல்லாம் நீயடா"

Manjula Devi
Feb 22, 2024,11:10 AM IST

சென்னை: மக்களின் இதயங்களை கவரும் வகையில் இசைஞானி இளையராஜாவின் இசையில் நினைவெல்லாம் நீயடா படத்தின் பாடல்கள் சமீபத்தில் புதுச்சேரியில் சிறுவர்களால் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


இளையராஜாவின் "நி" வரிசைப் படங்கள் அல்லது பாடல்கள் என்று ஒரு லிஸ்ட்டே போடலாம்.. காரணம், அத்தனையும் செம ஹிட்.. சூப்பர் ஹிட். ஏற்கனவே இளையராஜாவின் அசத்தலான இசையில் நினைவெல்லாம் நித்யா என்ற படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று அனைத்து பாடல்களும் ஹிட் கொடுத்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற நீதானே என் பொன்வசந்தம் .. இன்று வரைக்கும் மக்களின் இதயங்களை குடைந்து எடுக்கும் பாட்டு.




தற்போது அதே பாணியில் இளையராஜாவின் துள்ளலான இசையில் உருவாகியுள்ள படம்தான் நினைவெல்லாம் நீயடா. இப்படத்தில்  5 பாடல்கள் அமைந்துள்ளதாம். அதிலும் குறிப்பாக இதயமே.. இதயமே.. இந்தப் பாடலை இளையராஜா எழுத, யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளாராம். இப்படத்தின் பாடல்கள் எல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் தரும் வகையில் அமைந்துள்ளதாம். இது இளையராஜாவின் 1417 வது படம். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் புதுச்சேரியில் சிறுவர்களால் படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர்.




இப்படத்திற்கு இயக்குனர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனங்களை, எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்டை,ஆகிய படங்களை இயக்கியவர். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் இப்படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ராஜா பட்டார்சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ராயல் பாபு தயாரித்துள்ளார்.




இதில் பிரஜின் நாயகனாகவும், மனிஷா யாதவ் நாயகியாகவும், நடித்துள்ளனர். சினாமிகா இப்படத்தின் மூலம் மற்றொரு நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் ரோகித், யுவலட்சுமி, ரெடின் கின்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.




பள்ளி பருவத்தில் வரும் காதலை மையமாகக் கொண்டு இப்படம் அமைந்துள்ளது. பள்ளிப் பருவ காதலை பிரதிபலிக்கும் ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், காதல் 96, படங்களை தொடர்ந்து நினைவெல்லாம் நீயடா படமும் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.