நீலகிரி மாவட்டத்தில் வச்சு செய்யும் கன மழை.. பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

Manjula Devi
Jun 27, 2024,10:06 AM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுக்கா பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதனால்  சாலை மற்றும் தாழ்வான இடங்களில் நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பல்வேறு அணைகளின் நீர்மட்டம்  உயர்ந்தும் வருகிறது.




நீலகிரி மாவட்டத்தில் நேற்று மிக கனமழை பெய்யும் என்பதற்கான  ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது  அதன்படி நேற்று நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மிக கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் சேரங்கோடு பகுதியில் 12. 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் பந்தலூரில் 12.3 சென்டிமீட்டர், அவலாஞ்சியில் 12.2 சென்டிமீட்டர், மேல் பவானியில் 9 சென்டிமீட்டர், பாடந்துறையில் 8.8 சென்டிமீட்டர், செர்முள்ளியில் 8.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


இந்த நிலையில் நீலகிரியில் இன்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்பதால் மாணவர்களின் நலன் கருதி கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்கா பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டிக் கொண்டிருக்கிறது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் பாதுகாப்பான அளவில் கொட்டுவதால் அங்கு மக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.